எஸ்.எம்.எஸ் தந்தை என அழைக்கப்படும் பிரபல பின்லாந்து விஞ்ஞானி மரணம்.
பேசுவதற்காக மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்ட செல்போன்களில் முதன்முதலில் எழுத்துக்கள் வடிவில் எஸ்.எம்.எஸ் என்ற குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என கண்டுபிடித்தவர் பின்லாந்து நாட்டை சேர்ந்த மட்டி மக்கொனென் என்பவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 63.
இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படும் எஸ்.எம்.எஸ் என்ற குறுஞ்செய்தியின் தந்தை என்று அழைக்கப்படும் இவரது தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் தற்போது பலவகையான சாட்டிங் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தனது கண்டுபிடிப்பு குறித்து கடந்த 2012ஆம் ஆண்டில் பி.பி.சி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மக்கொனென் இந்த கண்டுபிடிப்பு தனது தனிப்பட்ட சாதனை அல்ல என்றும் இது ஒரு கூட்டு முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.எஸ் திட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நோக்கியா செல்போன் நிறுவனம் அவருக்கு உதவி செய்தது. எஸ்.எம்.எஸ் அனுப்ப கூடிய வகையில் நோக்கியா 2010 ரக செல்போனை உருவாக்கியது. அதில் இருந்து 1994ஆம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.