shadow

prob_2258669h

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்…’ என்ற திருப்பாவைப் பாடல் ஒலிக்க, மார்கழி அதிகாலைப் பொழுதில் குளிர்ந்த நீரில் பெண்கள் குளிப்பது வழக்கம். தமிழகம் எங்கும் பனி விழும் காலமாக மாறும் இந்த மாதத்தில், பெண்கள் வாசலில் கோலமிட்டு, பஜனை பாடிச் செல்வதையும் பார்க்கலாம்.

கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கூடுதல் குளிர்ச்சியும், பனியும் நிலவும் நேரத்தில் பல நூறு ஆண்டுகளாகப் பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் குளிர் தாங்க முடியாமல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதும் உண்டு.

குளிர் தாக்கினால்

பனி மற்றும் குளிர் காலத்தில் 18 வயது முதல் முதியவர்கள் வரையிலானவர்களை முகவாத நோய் (Bell’s palsy) தாக்க வாய்ப்பு உண்டு. உட்புறக் காது வழியாக மூளைக்குச் செல்லும் ஏழாவது நரம்பு, பனிக் காற்றால் தாக்கப்படும்போது, முகவாதம் ஏற்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் முகம் கோணலாகி, உதடுகள் கோணி, நாக்கு உணர்விழந்து, கண் இமை மூட மறுத்து, உமிழ் நீர் முழுங்க முடியாமல் போகும்.

“அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பதும், பனிக் காற்றில் வீடு மெழுகி, வாசலில் கோலமிட்டு, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பலர் முகவாத நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்” என்கிறார் சேலம் பாரத் பிசியோதெரபி மருத்துவர் எம்.செந்தில்குமார்.

முன்னெச்சரிக்கைகள்

இந்தப் பாதிப்பில் இருந்து விடுபடச் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஸ்வெட்டர் அணிந்துகொள்ள வேண்டும். காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். கை, கால் உறைகளைப் பயன்படுத்தலாம். மின் விசிறி காற்று காதில் நுழையாதபடி ஒருபுறமாகப் போர்த்திப் படுக்கலாம்.

“முகவாதம் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஒரு மாதம்வரை நோய் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாது. நோய் தாக்கிய உடனே, மூளை நரம்பு மருத்துவ நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பின், பிசியோதெரபி சிகிச்சை மூலம் முகவாத நோயைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தலாம். மின்காந்தத் தூண்டல் சிகிச்சை மூலம் செயல் இழந்த நரம்பு மண்டலத்தைத் தூண்ட முடியும்.

எளிய பயிற்சிகள்

கண்களை இறுக்க மூடி திறந்து பயிற்சி எடுக்க வேண்டும். வாயில் பலூனை வைத்து ஊதி ஊதிப் பயிற்சி செய்ய வேண்டும். ஆங்கில உயிர் எழுத்துகளான ஏ, இ, ஐ, ஓ, யூ ஆகியவற்றை உரிய உச்சரிப்பில் சத்தமாக வாய்விட்டுக் கூற வேண்டும். இவ்வாறு தொடர் பயிற்சி மூலம் முகவாத நோய்க்கு ‘குட்-பை’ சொல்லலாம்” என்கிறார் செந்தில்குமார்.

முகவாதம் பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் தாக்கக்கூடியது என்பதால், இருபாலரும் குளிர், பனிக்காலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Leave a Reply