shadow

11a copy

கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்தால் கண்ணாடி அணிவது ஒரு காலம். ஆனால், இன்று ஸ்டைலாக இருக்க வேண்டும், பெர்சனாலிட்டியைக் கூடுதலாகக் காட்டவேண்டும் என்பதற்காகவே கண்ணாடி அணிகின்றனர் இளைஞர்கள்.

எல்லோருமே கண் பார்வை குறைபாட்டைப் பரிசோதித்து, கண்ணாடியின் அவசியத்தை உணரவேண்டும்” என்கிற கண் மருத்துவர் என்.எஸ்.சுந்தரம், கண்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் கண்ணாடி போடவேண்டியதன் அவசியம் பற்றி கண்டிப்புடன் சொல்கிறார்.  

‘நாம் பார்க்கும் மனிதர்கள், பொருட்களின் பிம்பமானது ஒளிக்கதிராக, நம்முடைய கண்ணின் லென்ஸ் வழியே சென்று ஒளித்திரையின்மீது குறிப்பிட்ட இடத்தில் குவிந்து விழுகின்றன. ஆனால், சில பார்வை குறைபாட்டில் அதிகம் ஒளிக்கதிர்கள், ஒளித்திரையில் விழாமல், அதற்கு முன்போ அல்லது பின்னாலோ விழநேரிடும். இதனால்தான் கிட்டப் பார்வை, தூரப் பார்வை ஏற்படுகிறது. இந்த ஒளிக்கதிர்களை தகுந்த இடத்தில் விழச் செய்வதுதான் கண்ணாடியின் வேலை.

10 அடி தூரத்தில் இருக்கும் ஒரு எறும்பு போவது தெரிந்தால், பார்வை கூர்மையாக இருக்கிறது என்று அர்த்தம். அதே 10 அடி தூரத்தில் இருந்தால்தான், யானையாக இருந்தாலும் தெரியும் என்றால் அது நல்ல பார்வையல்ல. பார்வைக்கும் அளவுகோல் இருக்கிறது.

 தூரப்பார்வை (Hypermetropia)

கண்ணின் அமைப்பே சிறிதாக இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். குவிந்து வரும் ஒளிக்கதிர்கள் ஒளித் திரைக்குப் பின்னால் விழும். இதைத் தகுந்த இரு குவிலென்ஸினால் சரிசெய்யலாம். கண் புரை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், 10+ டி லென்ஸ் அவசியம். படிப்பதற்கு இதற்கு மேலும் +3டி ஆக அல்லது 14டி+   லென்ஸ் தேவைப்படும்.  கண் புரை அறுவை சிகிச்சை செய்து ஐ.ஓ.எல் (IOL)  வைத்துக் கொள்பவர்களுக்கு தூரப்பார்வை நன்றாக இருந்தாலும் படிப்பதற்குக் கூடுதலாக +3டி கண்ணாடி அவசியம் தேவை.

 கிட்டப் பார்வை (Myopia)

கண்களின் அமைப்பு இதில் பெரிதாக இருக்கும். குவிந்து வரும் ஒளிக்கதிர்கள் ஒளித்திரைக்கு முன்னாலேயே விழும்.  இந்தக் கிட்டப்பார்வையில் இரண்டு வகை உண்டு.

1. சிம்பிள் மையோபியா (Simple Myopia):

இந்த அமைப்பில் பார்வை, 1 அல்லது 2 வருடங்களில் சிறிது அதிகரிக்கலாம்.

2. ப்ரொக்ரசிவ் மயோபியா (Progressive Myopia):

இந்த அமைப்பில் வருடாவருடம் பவர் அதிகரித்துக் கொண்டே வரும்.  சுமார் 25 வயதுவரை இம்மாற்றம் ஏற்படலாம்.  இது பரம்பரை வாகு என்பதால் இதைத் தடுக்க முடியாது. பரிசோதனை செய்து தகுந்த Concave – lens கான்கேவ் லென்ஸ் மூலமாக, ஒளித்திரையின் முன்னால் விழக்கூடிய கதிர்களை விரிவடையச் செய்யலாம். இந்த மாதிரி பிறக்கும் குழந்தைகளுக்கு 3 வயதிலேயே கண் மருத்துவரிடம் காட்டி, பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

 ஒரு கோணப்பார்வை (Astigmatism)

ஒரு கோணத்தில் 90 டிகிரி வரக்கூடிய ஒளிக்கதிர்கள் ஒளித்திரையின் மீதும், இதற்கு எதிராக 180 டிகிரி கோணத்தில் வரக்கூடிய ஒளிக்கதிர்கள் ஒளித்திரைக்கு முன்போ அல்லது பின்போ விழலாம்.

 வெள்ளெழுத்து (Presbyopia)

40 வயதில் தொடங்கும் இது வியாதியல்ல. இயற்கையின் விதி. சிறிய வயதிலேயே பிளஸ் பவர் கண்ணாடி அணிபவர்களுக்கு 37, 38 வயதிலேயே வந்துவிடும். சிறு வயதில் உள்ள பார்வைத்திறன் படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும். குறிப்பிட்ட தூரத்தில் 25-30 செ.மீ. குறிப்பிட்ட அளவில் உள்ள எழுத்துக்களைப் பார்க்க முடியாது. (-) கண்ணாடி உள்ளவர்களுக்கு இதை எடுத்துவிட்டுப் பார்த்தால் தெரிய வரும். இதை சிலர் ‘நான் கண்ணாடி இல்லாமலேயே படிக்கிறேன்’ என்று பெருமையாக சொல்வதுண்டு. இது தவறு. ஐம்பது வயதில் தூரப் பார்வையானது மைனஸ் 2-ஆக இருந்தால் படிப்பதற்கு பிளஸ் 2டி சேர்த்தாலே போதும். பார்வை தெளிவாகத் தெரியும்.

50-60 வயதில் வெள்ளெழுத்து கண்ணாடி அணிந்தவர்கள், கண்ணாடி இல்லாமல் படிக்கத் தெரிகிறது என்று சந்தோஷப்பட்டு சொன்னால் அவர்களுக்கு கண்புரை ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.  தூரப்பார்வை குறைந்துவிடும்.  இந்த சந்தோஷம்கூட சில ஆண்டுகள்தான் நீடிக்கும்.  பிறகு பார்வையை எந்தக் கண்ணாடியின் மூலமாகவும், திரும்பப் பெற முடியாத நிலை ஏற்படும்.  இதற்காக பயப்பட வேண்டியதில்லை. கண்புரை அறுவை சிகிச்சை செய்து IOL லென்ஸ் பொருத்திக் கொண்டால் மீண்டும் பார்வை பெறலாம்.

தூரப்பார்வைக்கும், படிப்பதற்கும் நல்ல பார்வை வேண்டும் என்றால் கண்ணாடி மிகவும் அவசியம். 40 வயதுக்கு முன்பு பார்வைக்காக கண்ணாடி அணியாமல் இருக்கலாம். ஆனால், 40 முதல் 70 வயது வரைக்கும் குறிப்பிட்ட அளவுகோலின்படி நல்ல பார்வையுடன் கண்ணாடி இல்லாமல் இருக்கமுடியாது. தூரப்பார்வைக்கும், படிப்பதற்கும் என இரண்டையும் ஒரே சமயத்தில் தெரிந்து கொள்ள பைஃபோகல் லென்ஸ் தேவை.  ”கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். அத்துடன் கண்களை அடிக்கடி சிமிட்டுவதும்கூட பெரும்பாலான கண் பாதிப்பில் இருந்து மீள உதவும்” என்கிறார்.

கண்ணாடி அணியாமல் போனால்…

 பார்வை மங்கலாகும்.

 கண்ணில் வலி, கண் எரிச்சல், தலைவலி ஏற்படும்.

 படிக்க மிகவும் பிரயத்தனப் படவேண்டியிருக்கும்.

 சிறிது படித்தாலும் களைப்பு ஏற்படும்.

 கண் பாரமாக இருக்கும்.

 ஒழுங்காக, வேகமாகப் படிக்க முடியாத தன்மை, சீக்கிரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும்.

 புத்தகங்களை அதிக தூரத்தில் வைத்துப் படிக்க வேண்டியிருக்கும்.

 கண்ணில் நிரந்தரப் பார்வை இழப்பு, மாறுகண் போன்றவை ஏற்படலாம்…

Leave a Reply