shadow

eyeகண்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தமிழில் எழுத வேண்டுமானால், புதிதாகத்தான் வார்த்தைகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்த அளவுக்குக் கண்கள் குறித்துப் பேசியாயிற்று. இத்தனைக்குப் பிறகும் இப்போது எல்.கே.ஜி. படிக்கும் ஒரு குழந்தைகூட கண்ணாடி அணிகிற நிலையைக் கண்டால், நமக்குக் கண்ணீர்தான் வருகிறது.  ’80 சதவிகித பார்வை இழப்புக்கள் தவிர்க்கக்கூடியவை’தான் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும் ஏன் இந்த அலட்சியம்? கண்களைப் பாதுகாக்க, நம் கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் என்ன? இதோ, மதுரையைச் சேர்ந்த கண் மருத்துவர் பாஸ்கர ராஜன் விளக்குகிறார்.

சத்துக்குறைவினால் வரும் குறைபாடுகள்:

பார்வைத்திறன் மேம்பட வைட்டமின் ஏ மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சத்துக் குறைவாக உள்ள குழந்தைகளின் கண்ணில் உள்ள வெண்படலம் அதன் பளபளப்பை இழந்து சோர்வாகக் காணப்படும். இதனால் ‘பைடாட்ஸ்’ எனப்படும் காய்ந்த முக்கோணப் புள்ளிகள் வெண்வெளிப்படலத்தில் படர வாய்ப்பு உள்ளது. மேலும், மாலைக் கண் நோய் மற்றும் கருவிழியில் புண் ஏற்பட்டு பூ விழவும் நேரும். இவற்றுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்கவில்லையெனில், பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

கண்களில் காயம்:

பென்சில் உள்ளிட்ட கூரிய பொருட்களைக் குழந்தைகள் பயன்படுத்தும்போது பாதுகாப்புடன் செயல்படுகிறார்களா என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். போதிய பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு வெடிக்கவே கூடாது. வீட்டில் சுண்ணாம்பு, சுத்தம் செய்யப் பயன்படும் அமிலங்களை குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். மிகக் குறைந்த அல்லது அதிகமான வெளிச்சத்தில் படிப்பதும் கண்களைப் பாதிக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் செய்யும்போது சூடான தண்ணீர் மற்றும் எண்ணெய் கண்களில் படாமல் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்

தொழில் சார்ந்தவர்களுக்கு வரும் கண் பாதிப்புகள்:

இரும்புப் பட்டறை, மர இழைப்பு, இயந்திரங்கள் அருகில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் கண்ணாடி அணிந்து வேலை செய்வது இல்லை. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களைப்போல இவர்களும் உரிய பாதுகாப்பு கண்ணாடி அணிந்தே வேலை செய்ய வேண்டும். கண்ணில் உறுத்தல் அல்லது நீர் வடிதல் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

தையல் வேலையில் ஈடுபடுபவர்கள், பொற்கொல்லர்கள், வெல்டிங் வேலையில் இருப்பவர்களுக்கு உற்றுப்பார்க்கும் வேலைச் சூழல் என்பதால் மிகச் சீக்கிரத்தில் கண்கள் பாதிப்படையும். எனவே கண்களுக்கு ஒய்வு அளிப்பதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் சென்று கண்களைப் பரிசோதிப்பது அவசியம்.

ஓய்வும் தூக்கமும்:

தினமும் எட்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்கவேண்டும். அதுவும், மிகவும் இருள் சூழ்ந்த அறையில் தூங்குவதே கண்களுக்கு நல்லது. நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் முன்னால் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது, ஸ்மார்ட் போன்களில் நேரத்தைச் செலவிடுவது போன்றவை கண்களைச் சோர்வடையச் செய்து, விழித்திரையைப் பாதிக்கும். மாறுகண் ஏற்படுவதற்கான ஆபத்தும் இருக்கிறது. கண்களும் வறட்சி அடையும். எனவே அளவுக்கு அதிகமாகக் கண்களுக்கு வேலை தராதீர்கள். சில நேர இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு அளியுங்கள்.

கண்ணுக்குப் பகை:

புகைபிடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, வெளியேறும் புகையால் அருகில் இருப்பவர்களின் கண்களையும் பாதிக்கும். உள்ளே செல்லும் நச்சுப்பொருட்கள் பார்வை நரம்புகளைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, புகை உங்களுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் பகைதான்!

பாதுகாக்கும் முறைகள்:

சர்க்கரை நோய், கண் அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள் கண்ணில் ஏதும் கட்டிகள் இருந்தால் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பார்வை குறைபாடு, நெருங்கிய உறவினர்களிடையே நடைபெறும் திருமணங்கள் போன்றவற்றாலும் வருகின்றன. எனவே அத்தகைய திருமணங்களை உறுதியாகத் தவிர்க்க வேண்டும்.

கண்களுக்கான பயிற்சி:

பொதுவாக ஒரு நிமிடத்தில் 12 முறை கண்களைச் சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், ஐந்து முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அவ்வப்போது சிமிட்டத் தவறக் கூடாது.

கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது, கண்களில் சோர்வு ஏற்பட்டால், பணியைத் தொடங்கும் முன்பும் பின்பும் அவ்வப்போது, கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்து, இளஞ்சூடு பரவிய பிறகு, அதனைக் கண்களில் ஒத்தி எடுங்கள். இது இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும்.

கண்களை மேலே, கீழே, இடது, வலது என்று நாலாப்புறமும் சுழல விட வேண்டும். கண்ணைச் சுற்றியுள்ள கீழ்ப்பகுதி, மேற்பகுதியை மென்மையாக அழுத்திவிட வேண்டும். மேலும்,  பொட்டுக் குழி¬யைப் பெருவிரலைக்கொண்டு அழுத்த வேண்டும். அதன் பிறகு நெற்றியையும் அழுத்த வேண்டும். இதன் மூலம், கண்ணில் உள் பகுதி சீராக்கப்பட்டுப் பார்வை பாதுகாக்கப்படும். வேறு எதையும் கண் போல் பாதுகாப்பதற்கு முன், உங்கள் கண்களைப் பொன் போல் பாதுகாப்பது நல்லது.

   சத்துக் குறைபாடு உள்ளவர்கள் பச்சைக் கீரை, மஞ்சள் நிறமுடைய பழங்கள், பால், முட்டை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்

  வேதிப் பொருள் கண்களில் பட்டால், உடனே சுத்தமான குளிர்ந்த நீரினால் சுத்தமாகக் கழுவி அதன் அமிலத்தன்மையைக் குறைத்து பிறகு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் கண்ணைக் கசக்கக் கூடாது.

  கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

Leave a Reply