ஜெயகுமார் ஜெயிலுக்கு போவது உறுதி: ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சி தலைவர்களில் பரபரப்புடன் இருக்கும் தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது பெயர் பத்திரிகையில் இடம்பெறாமல் இருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை இழந்ததில் இருந்தே அவர் அடக்கி வாசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த புழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது: நாங்கள் எல்லாம் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து வலதுபுறமாக திரும்பி பொதுக்கூட்ட மேடையில் இருக்கிறோம்.
கூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் சிலர் குறிப்பாக ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வழியாக போலீஸ் வேனில் வருவார்கள். இடது புறமாக திரும்பி ஜெயிலுக்குள் செல்வார்கள். தம்பிதுரை தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும் இடமில்லை என்கிறார். அவரைப் போன்றவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது காங்கிரசின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.
இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் வகையில் வாழ்ந்து இன்னும் வழிகாட்டியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர். யார் காமராஜர்? என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் வடிவில் தான் காமராஜர் உள்ளார். காங்கிரஸ்காரர்களால் மட்டுமே பொற்கால ஆட்சியை தர முடியும்.
இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்
Leave a Reply
You must be logged in to post a comment.