மோடி-ஜெயலலிதா சந்திப்பை இழிவுபடுத்திய இளங்கோவனுக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டனம்.
சமீபத்தில் நெசவாளர் தின அறிவிப்பை வெளியிட தமிழகம் வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிமுக வட்டாரங்கள் கூறி வந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள திரைமறைவு உறவு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. மோடி-ஜெயலலிதா சந்திப்பு தமிழகத்திற்கு நலன் தரும் சந்திப்பு இல்லை. இது அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கான சந்திப்பு கிடையாது; முழுக்க முழுக்க வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்தானது” என்று கூறினார். இளங்கோவனின் இந்த பேச்சு அதிமுகவினர்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளங்கோவனின் உருவ பொம்மைகள் எரிப்பது, அவரது புகைப்படத்தை விளக்குமாற்றால் அடிப்பது போன்ற நிகழ்ச்சிகள் சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் நடைபெற்றது. நவநீதகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் சென்னையிலுள்ள சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், மதுரை, மதுரை, ஈரோடு, நாகப்பட்டணம், சிதம்பரம் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.