உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே காலிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மஹ்முதுல்லா 103 ரன்களும், ரஹிம் 89 ரன்களும், செளம்யா சர்க்கார் 40 ரன்களும் எடுத்துள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஜோர்டான் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், பிராட் மற்றும் அலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
வெற்றி பெற 276 ரன்கள் தேவை என்ற நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 48.3 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி போட்டியில் இருந்து பரிதாபமாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேச அணி கம்பீரமாக காலிறுதிக்குள் நுழைகிறது.
இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முதலாக சதமடித்த வங்கதேச அணியின் மஹ்முதுல்லா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.