முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் புதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவருக்கு சொந்தமான ரூ.232 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க துறையினர் திடீரென முடக்கியுள்ளனர். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆட்சி காலத்தில், அவரது மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் பல்வேறு நிறுவனங்களில் மறைமுகமாக முதலீடு செய்ததாகவும் அவ்வாறு முதலீடு செய்த சொத்துகளை அமலாக்க துறையினர் முடக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவரது கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
இதில் இந்தியா சிமெண்ட்ஸ், ஜனனி இன்ஃப்ரோ, கார்மல் ஏசியா, இந்திரா டெலிவிஷன் ஆகிய நிறுவனங்களின் முதலீடுகள், பங்குகள் ஆகியவைகள் அடங்கும். மேலும் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் விஜயா வங்கி கிளையில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.96 கோடி உட்பட மொத்தம் ரூ.232.38 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இதே வழக்கில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க துறையினர் முடக்கி, அது தொடர்பாக ஐபிஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்களிடம் விசாரனை நடத்தி வரும் நிலையில் தற்போது மேலும் ரூ.232 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.