நாம் உண்ணுவது, நமக்கு மனநிறைவையும், முழுமையையும் கொடுத்தால் தான் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ முடியும்.

அந்த வகையில் சாப்பிடும் உணவில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பெருமளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன.

உண்ணும் உணவு மனதிற்கும் வயிறுக்கும் நிறைவாக இல்லாமல் இருந்தாலோ அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வேறு நொறுக்குத் தீனிகளைத் தேடிச் செல்லத்தூண்டினாலோ நமது உணவு பழக்கம் சரியில்லை என்று பொருள். அதனால், சாப்பிடும் உணவை ரசித்து, சுவைத்து சாப்பிட்ட பின், அதில் மனநிறைவையும் முழுமையையும் கொடுக்கும் சில உணவுப் பழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. உணவு உண்ணும் நேரத்தை, சாப்பிடுவதில் மட்டுமே செலவிட வேண்டும்.

அப்படி கவனத்துடன் சாப்பிடும் வேளைகளில், வேகமாகவும், முழுமையாகவும் உண்டு முடித்த மனநிறைவு கிடைக்கும். மேலும் சாப்பிடும் நேரங்களில் வேகமான இசையைக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் சாப்பிடும் வேகத்தை அது அதிகப்படுத்திவிடும். இதனால் உடல் நலத்திற்கும் கேடு விளையும்.

நுகர்தலும், மெல்லுதலும்

உணவை நுகர்ந்து பார்க்கும் போதே, பாதி மனநிறைவு ஏற்படும். இரண்டாவதாக, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் நொறுங்கத் தின்றால் நூறு வயது! நன்றாக மென்று சாப்பிடும் போது, நாவின் உயிரணுக்கள் தூண்டப்பட்டு, இந்த செய்தியை மூளைக்குக் கொண்டு செல்லும். இதன் மூலம் ‘நன்றாக சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வும் கிடைக்கும்.

நீர்மச்சத்து மற்றும் நீர்மம் போன்ற உணவுகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அதிக காற்றும், நீரும் உள்ள உணவுகள் வேகமாக வயிற்றை நிரப்பிவிடும். எனவே காய்கறி சாறும், திராட்சை களையும் சாப்பிடலாம்.

புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை விட, கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் மனநிறைவை ஏற்படுத்தும் உணர்வைத் தூண்டுவதற்கு சற்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். எனவே கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம்.

தூக்கம்

தூக்கம் குறைவாக இருக்கும் போது, க்ரெலின் மற்றும் குறைவான அளவு லெப்டின் ஆகிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். இவை தான் உணவுத் தேவைக்கான வேலைகளில் ஈடுபட்டு வருபவை.

வயிற்றில் சுரக்கும் க்ரெலின் பசிக்கான தூண்டுதலை அதிகப்படுத்தும் போது, லெப்டின் மனநிறைவிற்கான தூண்டுதலை உருவாக்கி, பசியைக் குறைக்கும். எனவே உடலுக்கு ஓய்வும், தூக்கமும் தேவை.

தினமும் சராசரியாக 8 குவளை (3முதல் 4 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் அடிக்கடி பசியெடுக்கும். இதற்கு உண்மையான காரணம் தாகமாக இருப்பது தான்! எனவே சாப்பிடும் முன் ஒரு தம்ளர் அளவு அல்லது அதற்கும் மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உணவில் மனநிறைவும், முழுமையும் கிடைக்கும்.

சிறிய தட்டுகள்

சாப்பிடும் தட்டு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்த தட்டு முழுவதும் உணவைப் பரிமாறி, தட்டு காலியாகும் வரை சாப்பிடுவது தான் வழக்கம். இந்த பழக்கத்தால், சாப்பிடுவதன் நோக்கம் முழுமையாக மற்றும் மனநிறைவாக சாப்பிடுவது என்று இல்லாமல், தட்டை காலியாக்குவது தான் என்று மாறி விடுகிறது. எனவே, பெரிய தட்டுக்கு மாற்றாக, சற்றே அளவில் சிறிய தட்டினை பயன்படுத்தத் தொடங்கினால், மனநிறைவை உணரலாம்.

நெடுநேரம் சாப்பிட வைக்கும் உணவுகள்

சாப்பிட அதிக நேரம் எடுக்கும் உணவு வகைகளை உண்ணும் போது, உண்ணுவதில் முழுமையாக கவனம் திரும்பும் மற்றும் மனநிறைவும் ஏற்படும். எடுத்துக்காட்டாக, நார்ச்சத்த அதிகமுள்ள அவரை, வாழைத்தண்டு, காரமான குழம்பு ஆகிய உணவுகள் உண்ணும் நேரத்தை அதிகப்படுத்தும்.

ஆப்பிள்

சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால், உணவின் அளவு குறைவதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. எனவே, தினசரி உணவில் ஒரு ஆப்பிளை சேர்த்துக் கொள்வதன் மூலம், தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.

இயற்கை உணவுகள்

செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளில், சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அதிகமான கலோரிகளைக் கொண்டது. எனினும், இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது, அதிகமாக மென்று தின்ன வேண்டியதாக இருப்பதால், ஒவ்வொருமுறை மெல்லும் போதும் மனநிறைவும், முழுமையும் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது.

இவைகளையெல்லாம் பின்பற்றும் போது, உடலை பருமனடையச் செய்யும் அதிகமான உணவு உட்கொள்ளுதல் குறைவதோடு, நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும்.

Leave a Reply