தமிழிசை செளந்திரராஜனை கரகாட்டக்காரியோடு ஒப்பிடட்டாரா இளங்கோவன்?
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தன்னை அவதூற்காக பேசியதாக விஜயதாரிணி எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் சமீபத்தில் காவல்நிலையைத்தில் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனையும் அவர் அவதூறாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழிசை சவுந்தர்ராஜனை கரகாட்டக்காரி, பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட இளங்கோவன் பேசியிருந்ததாகவும், தமிழிசை செளந்திரராஜனை அவமதித்ததோடு கரகாட்டம், பொய்க்கால் குதிரை கலைஞர்களையும் அவர் அவமதித்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், கமிஷனர் ஆபீசில் புகார் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம் அளித்ததோடு, தன்னுடைய பேச்சு தமிழிசை செளந்திரராஜன் மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘தமிழக பாஜக வின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற தமிழிசை சவுந்தரராஜன் எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும், சோனியா காந்தி மீதும் பழிபோட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மத்திய பாஜக அரசு மீது விமர்சிக்கின்ற போதெல்லாம் அதற்குரிய பதிலை சொல்லாமல் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவது குறித்து பலமுறை விமர்சனம் செய்திருக்கிறோம்.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப ஒருவர் கூறுவதைப் போல ஒரே மாதிரியாக நடன அசைவுகளைக் கொண்டு திரும்பத் திரும்ப ஆடுகிற கரகாட்டக்காரர்கள், பொய்கால் குதிரை ஆட்டக்காரர்களைப் போல தமிழிசை சவுந்தரராஜனுடைய கருத்து ஒரே மாதிரியாக இருப்பதாக மேற்கோள் காட்டி பேசினேன்.
அந்த அடிப்படையில் தான் அந்த ஒப்பீடு இருந்ததே தவிர, சகோதரி தமிழிசை சவுந்தரராஜனையோ அல்லது அத்தகைய ஆட்டத்தை ஆடுகிற கலைஞர் பெருமக்களையோ புண்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கமல்ல.
தனிப்பட்ட முறையில் தமிழிசை சவுந்தரராஜனுடைய அரசியல் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததோடு, அவர்மீது அன்பையும், பாசத்தையும் வைத்திருக்கிறேன். நான் பேசிய ஒப்பீட்டை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் அவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.