லண்டனில் 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: பெரும் பரபரப்பு
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் என்ற பகுதியில் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் தீப்பிடித்ததை யாரும் கவனிக்கவில்லை என்பதால் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதுகுறித்து சற்று தாமதமாகவே தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக, சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த குடியிருப்பில் வசித்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறி உயிர்தப்பினர். தீ சூழ்ந்த அறையில் சிக்கிக்கொண்ட 2 நபர்கள் மட்டும் கிரேன்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலில் 4-வது தளத்தில் தீப்பிடித்து, மேல் தளத்திற்கும் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேல் தளம் சேதமடைந்து, கூரை இடிந்து விழும் ஆபத்து இருப்பதாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. #LondonFire #LondonFlatsFire
Leave a Reply
You must be logged in to post a comment.