shadow

வடகொரிய அதிபரை நேருக்கு நேர் சந்திப்பது எப்போது? டிரம்ப் பதில்

அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளும், அணு ஆயுத சோதனைகளும் நடத்தி வருகிறது. இதனால் வடகொரியாவின் கொட்டத்தை அடக்க ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு செய்த அமெரிக்கா, கொரிய தீப கற்பகத்துக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன் மனநிலை சரியில்லாதவர் போன்று இருக்கிறார். பார்க்க அழகான இளம் பெண் போன்று காட்சியளிக்கிறார் என்று கிண்டலடித்தார்.

மேலும் கிம்ஜாங்-உன் மிக இளம் வயதில் பதவிக்கு வந்தவர் என்றும், ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் சித்தப்பாவை கொன்றார். தற்போது தனது அண்ணனை கொல்ல உத்தரவிட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, வட கொரிய அதிபர் கிம்ஜாங்- உன்னை சந்திக்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கு உகந்த நல்ல சூழ்நிலை அமைய வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார். ஆனால் தற்போது இதற்குரிய சூழ்நிலை இல்லை என அவர் கருதுகிறார். இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி துறை மந்திரி சீன் ஸ்பைகர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா தனது அணு ஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வேண்டும். மிரட்டல் விடும் சூழ்நிலை மாற வேண்டும். அப்போதுதான் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசும் சூழ்நிலை உருவாகும் தற்போது அந்த நிலை ஏற்படவில்லை என ஸ்பைகர் விளக்கம் அளித்தார்.

Leave a Reply