ஸ்ரீங்கம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த ஜெயலலிதா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதி எம்.எல்.ஏ. பதவி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர், முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்ற செயலாளரிடம் தி.மு.க. கடிதம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீனுக்கு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவி காலியாக உள்ளது என்று ஏன் இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும், சட்டப்பேரவையிலும், பேரவை வளாகத்திலும் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஏன் இன்னும் அகற்றவில்லை. இந்த விவகாரத்தில் சட்டப்படியான இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவி காலியாக உள்ளது என அறிவிக்கவில்லை என்றாலோ, சட்டப்பேரவையிலும், சட்டமன்ற வளாகத்திலும் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அகற்றப்படவில்லை என்றாலோ தங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.