shadow

ஜெயலலிதா அரசுக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும். கருணாநிதி அறிக்கை
karunanidhi
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் வெள்ள நிவாரண பணிகளுக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “வரலாறு காணாத மழை, மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை சேதாரப்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

இன்னும் சில நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது, மேலும் கவலை கொள்ள வைக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில், தமிழக மக்களைக் காப்பாற்ற அரசு எடுக்கும் அனைத்து நிவாரணப் பணிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவை அளிக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044-24320280 அல்லது 7810878108 ஆகிய இரு எண்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அது போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக அலுவலகங்களையும் அந்தந்த தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply