shadow

70 தொகுதிகள். ஆட்சியில் பங்கு. தேமுதிக பிடிவாதத்தால் திமுக திணறல்
vijayakanth
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸை மிக எளிதாக இணைத்து கொண்டதுபோல் தேமுதிகவை அவ்வளவு எளிதில் கொண்டு வர அரசியல் சாணக்கியன் என்று கூறப்படும் கருணாநிதியால் முடியவில்லை

அதற்கு தேமுதிக போடும் நிபந்தனைகள்தான் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது. 70 தொகுதிகளும் ஆட்சியில் பங்கும் வேண்டும் என்பதில் தேமுதிக பிடிவாதமாக இருப்பதாகவும், இதற்கு ஒப்புக்கொள்ள திமுக மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2104ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் படுதோல்வி அடைந்த திமுக, இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளது. இதே நிலைதான் தேமுதிகவுக்கும் உள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் எளிதில் எதிர்க்கட்சி தலைவராகிய விஜயகாந்த் இந்த தேர்தலில் அதிமுக, அல்லது திமுக ஆகிய இரண்டில் ஒரு கூட்டணியில் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

மக்கள் நலக்கூட்டணி அல்லது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அது தற்கொலைக்கு சமம் என்பது விஜயகாந்துக்கு நன்றாகவே புரிந்துள்ளது. அவர் திமுக கூட்டணிதான் என்பதை பல மாதங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டார். சமீபகாலமாக திமுகவை அவர் விமர்சனம் செய்யாததே இதற்கு சான்று. இருப்பினும் திமுகவுடன் பேரத்தை அதிகரிக்கவே பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல அவர் நாடகமாடி வருவதாக கூறப்படுகிறது.

தேமுதிக பேரத்துக்கு கட்டுப்படுவதா? அல்லது தேமுதிக இல்லாமல் தேர்தலை சந்திப்பதா? என்பதை திமுக மிக விரைவில் முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.,

Leave a Reply