விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியில் இருந்து ஏற்கனவே எட்டு எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதி பற்றி பேசுவதாக அறித்துவிட்டு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள்  முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களில் தற்போது 21 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அவரது கட்சியில் இருக்கின்றனர். தன்னை விட்டு பிரிந்தவர்களை விஜயகாந்த் இன்னும் கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் மேலும் இரண்டு எம்.எல்.க்களை பிரித்துவிட்டால் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்களை வைத்து தனி அணியாக உருவாக்கிவிட வேண்டும் என அதிமுக தலைமை கருதுகிறது.

தேமுதிக நம்பர் 2 என்ற தனி அணி ஆரம்பிப்பதன்முலம் விஜயகாந்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காலி செய்வதோடு, தேர்தல் நேரத்தில் தனது கட்சி எம்.எல்.க்களையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் இவர் எப்படி மக்கள் பிரச்சனையை கவனிப்பார் என பிரச்சாரம் செய்ய அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் அந்த இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேமுதிக தலைவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Leave a Reply