இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின் வீடு ராஞ்சியில் உள்ளது. நேற்று டோனி வீட்டில் உள்ள அனைவரும் இந்தியாஆஸ்திரேலியா மோதிய 4வது ஒருநாள் போட்டியை காண்பதற்காக மைதானத்திற்கு சென்றுவிட்டனர். இந்த சமயத்தில் டோனியின் வீட்டை மர்ம ஆசாமிகள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் சுவரின் வெளிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் சேதம் அடைந்துள்ளது. நேற்றைய போட்டி மழை காரணமாக ரத்தானதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபட்டனரா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து டோனியின் மைத்துனர் கவுதம் குப்தா கூறுகையில், ஏற்கனவே இதுபோன்று 4 முறை வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை பார்த்த பின்பு தான் யார் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பதை கூற முடியும். அதை தவிர்த்து தனிப்பட்ட யார் மீதும் கண்மூடித்தனமாக குற்றம் சாட்ட முடியாது என்றார். இந்த விவகாரம் தொடர்பாக ராஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply