shadow

 

90

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான்.

கீரைகளை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?

   கீரைகள் குறுகிய காலப் பயிர்வகைகள் என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

   கீரைகள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது.

   பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்திடுங்கள்.

கீரை குறிப்புகள்..

  கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும்.

   பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.

   கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேகவைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும்.

   கீரைகளை வேகவைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.

   மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

   இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.

   கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.

   கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.

ரத்த சோகையை விரட்டும் முருங்கை

முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே.  அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை. அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்தக் கீரை, மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது.

சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் இருப்பவை இரும்புச் சத்தும், வைட்டமின் சியும்தான்.

பலன்கள்: இரும்புச் சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும். உடல்நலத்தை அதிகரிக்கும்.

டிப்ஸ்: ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை,  முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.

கவனிக்க: கல்லீரலில் பிரச்னையிருப்பவர்களுக்கு செரிமானக் குறைபாடு இருக்கும். முருங்கையில் அதிகளவு நார்ச்்சத்துக்கள் இருப்பதால், அவர்களால் இந்த உணவை ஜீரணிக்க முடியாது. மற்ற அனைவரும் சாப்பிடலாம்.

ஊட்டமளிக்கும் முளைக்கீரை

எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளிர்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.

சத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி, மற்றும் இரும்பு, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம் இதில் நிறைவாக உள்ளன.

பலன்கள்: கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்து. மூளை வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்குக் கவசமாகும். பசியைத் தூண்டும். உடல் எடை அதிகரிக்கும். பலவீனமாக இருப்பவர்கள், அதிக உடல் சூடு கொண்டவர்கள் மற்றும் பித்த உடல் உள்ளவர்கள் இந்தக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.

டிப்ஸ்: சிலர் வாய்ப்புண்ணால் அவதிப்படுவார்கள். முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து,  நீர் பாதியாக சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.

கவனிக்க: இது குளிர்ச்சித்தன்மைகொண்டது என்பதால் ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும்.

உடல் வலிமைக்கு அரைக்கீரை

மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது. எந்த வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. இலைகளுடன் தண்டுகளையும் சேர்த்து சாப்பிடலாம்.

சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளது.

பலன்கள்: உடல் வலுப்பெறும். ரத்தத்தை அதிகரிக்கும். பிரசவித்த பெண்களுக்கு உடனடி ஊட்டத்தை அளிக்கும். பால் அதிகம் சுரக்கச் செய்யும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சோர்வு, உடல் வலியைப் போக்கி புத்துணர்வு தரும். ரத்த நாளங்கள் நன்கு செயல்படும். வாயுப்  பிரச்னையைப் போக்கும்.

  டிப்ஸ்: சின்ன வெங்காயம், தக்காளியை வதக்கி கீரை சேர்த்து வெந்ததும், உப்பு, புளி சேர்த்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.

கவனிக்க: குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவருமே  சாப்பிடலாம்.

கண்களுக்கு பொன்னாங்கண்ணி

அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன.

பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை இருந்தால், இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவதுடன், கண்களுக்குப் பயிற்சியும் செய்துவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்களில் நீர்வழிதல், கட்டி, தொற்று, மங்கலான பார்வை போன்ற கண் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். மாலைக்கண் நோய்கூட குணமாகும். மூளை, நரம்புகள் சீராக இயங்கும். எலும்புகளும் வலிமை பெறும். சருமம் பொலிவுறும். கூந்தல் நன்றாக வளர உதவும்.

டிப்ஸ்: பொன்னாங்கண்ணி இலைகளின் சாறோடு, பசு வெண்ணெய் கலந்து, பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.  

கவனிக்க: பொன்னாங்கண்ணி யாருக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அனைவரும் சாப்பிடலாம்.

மூலத்தை சரியாக்கும் பசலைக் கீரை

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது.

 

சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், புரதம், இரும்பு, கால்சியம் போன்றவை உள்ளன.

பலன்கள்: பைல்ஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு பசலை மிகவும் நல்லது. ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களை, எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல், இந்தக் கீரையின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.  நீர்க்கடுப்பு, நீரடைப்பு குணமாகும். சருமப் பிரச்னைகள் தீரும். நோய்த் தொற்றைப் போக்கும்.  வாய்ப்புண்களை ஆற்றும்.

டிப்ஸ்: கருணைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பசலை சேர்த்து சமைத்து, சாப்பிட்டுவர ஆரம்பக்கட்ட மூல நோயைக் குணப்படுத்தும்.  

கவனிக்க:சைனஸ், வீசிங் பிரச்னை இருப்பவர்கள் மழைக்காலத்தில் இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.  

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சிறு கீரை

பெயர்தான் சிறு கீரை. இதன் பலன்களோ ஏராளம். தண்டுகள் பெரிதாக இருக்கும். ஆனால் இலைகள் சிறியதாக இருக்கும். சிறு கீரை சூடு என்பதால், குளிர்ச்சித்தன்மை உள்ள காய்களுடன் சேர்க்கக் கூடாது. இது மலமிளக்கியாகவும் செயல்படும்.

 சத்துக்கள்: கலோரி, புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்றவை உள்ளன. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

பலன்கள்: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தினமும் இந்தக் கீரையைக் கொடுத்துவரலாம். கூடவே ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சியும் செய்துவந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்க உதவும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு, சிறுகீரை மிகவும் நல்லது. கல்லீரலுக்கு நன்மையை செய்யும்.

டிப்ஸ்: 4 இலையுடன் 4 மிளகைச் சேர்த்து சாப்பிட்டு வர, சரும அலர்ஜி குணமாகும்.

கவனிக்க: பித்த உடல்காரர்கள், அதிக உடல் வெப்பம் கொண்டவர்கள், இந்தக் கீரையை அதிகமாக சாப்பிட வேண்டாம்.

மூட்டுவலிக்கு முடக்கத்தான்

கை, கால்கள் முடங்கிப்போய்விடாமல் தடுக்கிறது என்பதால் இதற்கு முடக்கத்தான் என்று பெயர். மருத்துவ குணங்கள் நிறைந்தது.  

சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்தது. மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும் உள்ளது.

பலன்கள்: 40 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், எலும்புகளுக்கு உறுதியைத் தரும். வாதத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர, வலி இடம் தெரியாமல் நீங்கும். மூட்டுகளில் வீக்கம் இருப்பவர்களும் சாப்பிடலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டுவர, கால் மூட்டு வலி வராது.

டிப்ஸ்: இதை அப்படியே சாப்பிடாமல், நறுக்கி அல்லது அரைத்து, தோசை மாவுடன் கலந்து சாப்பிடலாம். ஆனால் மாவைப் புளிக்கவைக்கக் கூடாது.

கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது.

வயிற்றுப் பிரச்னைக்கு வெந்தயக்கீரை

குட்டிக் குட்டி இலைகளாக, சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.

சத்துக்கள்: புரதம், கால்சியம், இரும்பு உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் இதில் நிறைய உள்ளன.

பலன்கள்: உடலின் பலத்தை அதிகரிக்கும். நோய் எதிர்பாற்றலை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையை குணமாக்கும். மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். வாயுப் பிரச்னை குணமாகும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சீராகவைக்கும். வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும். உடல்சூடு தணியும். முகப்பரு தொல்லை, சருமப் பிரச்னைகள் குணமாகும். குடல்புண்களை ஆற்றும்.

டிப்ஸ்: வெந்தயக்கீரையை கோதுமை மாவில் சேர்த்து  சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் இதன் கசப்புச் சுவை நீங்கும்.

கவனிக்க: சளி, இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

வாய்ப்புண் குணமாக்கும் மணத்தக்காளி கீரை

சுக்குட்டிக் கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக் கீரை, அதிக மருத்துவக்குணம் வாய்ந்தது. குரல் வளத்துக்கு ஏற்றது. அடிக்கடி தொண்டை கட்டிக்கொள்ளும் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிகமாகச் சாப்பிடலாம்.

சத்துக்கள்: வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாவுச்சத்து, புரதம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. கொழுப்புச் சத்து மிகுந்த அளவில் உள்ளது.

பலன்கள்: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணைக் குணமாக்கும். அல்சருக்கு அற்புத மருந்தாகச் செயல்படுகிறது. களைப்பு, சோர்வு நீங்கும். தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு அருமருந்து. கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் நீங்கும். தொண்டைக் கரகரப்பு சரியாகும். உடல் வெப்பம் தணியும். இதில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. கருப்பை குறைபாட்டை நீக்கும்.

டிப்ஸ்: கீரைச் சாறுடன் 10 மி.லி முட்டைகோஸ் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் இடம் தெரியாமல் மறையும். வாரம் ஒருமுறை மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்து சாப்பிடலாம். வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அகற்றும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

புத்துணர்வு தரும் புளிச்ச கீரை

புளிப்புச் சுவை கொண்டுள்ள இந்தக் கீரையை அனைத்து வகையிலும் செய்து சாப்பிடலாம். ஆனால், புளியின் அளவைக் குறைப்பதே நல்லது. இரண்டு புளிப்பும் சேர்ந்து சுவையை மாற்றிவிடும். மேலும் இதனுடன் எள் சேர்த்தும் சாப்பிடலாம்.

சத்துக்கள்: வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

பலன்கள்: சரும வறட்சியைப் போக்கும். சருமம் அழகு பெறும். பசியின்மையைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சருமத்தில் உருவாகும் சிறு ரத்தக் கட்டிகளைப் போக்கும். ரத்த நாளங்களை சீர்செய்யும்.

டிப்ஸ்: சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து அரைத்து, துவையலாக செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.  வயிறு மந்தம் நீங்கும். புளிச்ச கீரையை நீரில் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடித்துவந்தால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

கவனிக்க: மூட்டுவலிப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கலாம்.

நினைவாற்றலைப் பெருக்கும் வல்லாரை

சூடும் அல்லாத குளிர்ச்சியும் இல்லாத சமநிலை இயல்பு கொண்ட கீரை இது.

சத்துக்கள்: கால்சியம், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் ஆகியவை உள்ளன.

பலன்கள்: நினைவுத்திறன் அதிகரிக்கும். இழந்த நினைவாற்றலைக்கூட திரும்பப் பெறலாம். ஆட்டிசம் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. அவர்களின் அதீத இயல்பு குணத்தைக் கட்டுப்படுத்தி, செய்யும் செயலில் நினைவாற்றலைப் பெருக்கச் செய்யும். கவனச் சிதறல்களைக் குறைக்கும். உடல்சோர்வு, நரம்புத் தளர்ச்சி, பார்வை மங்கல் குணமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

டிப்ஸ்: வல்லாரை சாறுடன் ஒரு ஸ்பூன் பசு நெய் கலந்து குடிக்க, பிஞிலி என்ற நல்ல கொழுப்பு அதிகமாகும்.  

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

சளி தொல்லைக்கு தூதுவளை

தூதுவளை சூடு என்பதால், இதை மூலிகையாகவே பயன்படுத்துவர். இதைக் கஷாயமாக செய்து குடிக்கலாம். கசப்பான சுவையைத் தரும் கீரை என்பதால், மற்ற கீரைகளைப் போல சாப்பிட முடியாது.

சத்துக்கள்: வைட்டமின் சி, இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன.

பலன்கள்: ஜலதோஷம் நீங்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை இந்தக் கீரைக்கு உண்டு. தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று குணமாகும். நரம்புகளை வலுப்படுத்தும்.

டிப்ஸ்: தூதுவளைப் பொடியை 48 நாட்கள் தேன் கலந்து சாப்பிட்டுவர, தொண்டை வலி நீங்கும்.

கவனிக்க: பைல்ஸ் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

பசியைத் தூண்டும் முள்ளங்கி கீரை

முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் உள்ளன.

பலன்கள்: சிறுநீரைப் பெருக்கும். நீரடைப்பை நீக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். பசி எடுக்காமல் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட, நன்றாகப் பசிக்கும். கண் பார்வை அதிகரிக்கும்.

டிப்ஸ்: முள்ளங்கி இலையை சாறாக்கி 5 மி.லி அளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் நீங்கும்.

கவனிக்க: சளி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய் உள்ளவர்கள் இந்தக் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம்.

புற்றுநோயைத் தடுக்கும் பாலக்கீரை

குளிர்ச்சித்தன்மை கொண்டது. பெரிய பெரிய இலைகள் கொண்டதால், கழுவுவதற்கு மிகவும் சுலபம்.

சத்துக்கள்: வைட்டமின் கே, ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்பு, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாகக் கொண்டது.  

பலன்கள்: உடல் சூட்டைத் தணிக்கும். மூளை வளர்ச்சிக்கு உதவும். சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ரத்த உற்பத்திக்கு உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது.

டிப்ஸ்: பருப்புடன் சேர்க்காமல் தனியாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது. 10 கிராம் பாலக்கீரையுடன், அரை டீஸ்பூன் சீரகம், 2 பூண்டு பல் சேர்த்து தண்ணீர்விட்டு, கொதித்ததும் வடிகட்டிக் குடித்தால், வெள்ளைப்படுதல் குணமாகும்.

கவனிக்க: சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.

 ரத்த அணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை

தாளிக்கப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையின் சத்துகளை மனதில் பதித்துக்கொண்டால், ஓரத்தில் ஒதுக்க மனம் வராது. அனைத்து சமையலுக்கும் வாசனையைக் கூட்ட மட்டுமல்லாது, தனியாக சமைத்தும் சாப்பிடலாம்.

சத்துக்கள்: இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் ஆகியவை உள்ளன.

பலன்கள்: ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட, கை, கால் நடுக்கம் நிற்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். நகங்கள் எளிதில் உடையாது, வலிமை பெறும். நினைவுத்திறன் அதிகரிக்கும். சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. வீக்கம், கட்டிகள் இருந்தால் குறையும். உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமன் செய்யும். கூந்தல் கருப்பாகும். முடி உதிர்தலைத் தடுக்கும். உடல் சூடு தணியும். இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்கும்.

டிப்ஸ்: கறிவேப்பிலை, இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், கொத்தமல்லி சேர்த்து வதக்கி அரைத்துத் துவையலாகவும் செய்யலாம்.  கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடியாகவும் செய்துகொள்ளலாம். கூந்தல் செழிப்பாக வளரும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

உடல் தூய்மைக்கு கொத்தமல்லி

உணவை அலங்கரிப்பதற்காக மட்டுமே கொத்தமல்லியைப் பயன்படுத்துகிறோம். ஏதோ கடைசியில் சேர்க்கும் வாசனைப் பொருள் என்ற எண்ணமும் பலருக்கு உண்டு. ஆனால் இதிலிருக்கும் சத்துக்கள் மிகுந்த நன்மை தரக்கூடியவை.

சத்துக்கள்: வைட்டமின் பி1, பி2, சி, புரதம், கால்சியம், நார்ச்சத்து, ஆக்சாலிக் அமிலம் இதில் உள்ளன.

பலன்கள்: அதிக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பக்கவிளைவைக் குறைத்து, மருந்துக் கழிவை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் வல்லமை பெற்றது. நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை (மெட்டல்ஸ்) வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக்கும். ரத்த சோகையைக் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும். பித்தத்தால் ஏற்படும் வாந்தியைப் போக்க, கொத்தமல்லித் துவையலை சாப்பிடலாம். சருமத்தை சீராக்கி பொலிவடையச் செய்யும்.

டிப்ஸ்: ஒரு டம்ளர் கொத்தமல்லி சாறை வாரம் ஒருமுறை குடித்துவர, நச்சுக்கள், உணவோடு சேர்ந்துள்ள பூச்சி மருந்துகள், ரசாயனங்களை வெளியேற்றும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

மலச்சிக்கல் தீர்க்கும் அகத்திக் கீரை

அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்திக் கீரை என பெயர் வந்தது.  சிறு கசப்புச் சுவை கொண்டது.

சத்துக்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், தாது உப்புக்கள், தயாமின், ரிபோஃப்ளேவின், மாவுச்சத்து, புரதம் ஆகியவை இதில் உள்ளன.

பலன்கள்: பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். இதை சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும். டீவார்மிங்’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதில் உள்ள கசப்புச் சுவை குடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். மலச்சிக்கலைப் போக்கவல்லது. குடல்புண், அரிப்பு, சொரி, சிறங்கு போன்ற சரும நோய்கள் விலகும். உடல் சூட்டைத் தணிக்கும்.

டிப்ஸ்:  இந்தக் கீரையை நன்றாக வேகவைக்க வேண்டும். பருப்பை வேகவைத்து, பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிடலாம்.

கவனிக்க: மருந்து சாப்பிடுபவர்கள் இந்தக் கீரையைத் தவிர்க்கலாம். அனைவருமே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.  தினமும் சாப்பிடக் கூடாது.

சோர்வைப் போக்கும் தவசி கீரை

இதை ஹார்லிக்ஸ் கீரை, மல்டி வைட்டமின் கீரை என்றும் சொல்வார்கள்.

சத்துக்கள்: இரும்புச் சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவு இருக்கிறது.

பலன்கள்: ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல், புத்துணர்வு பெறும். ஆண்மை குறைபாடு நீங்கும்.

டிப்ஸ்: சாம்பாரில் சேர்த்து இந்தக் கீரையை சாப்பிட்டால், சுவை அலாதியாக இருக்கும்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.செரிமானத்துக்கு புதினாசட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது இதன் சிறப்பு.

செரிமானத்துக்கு புதினா

சட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது தான் சிறப்பு.

சத்துக்கள்: நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, தயாமின் உள்ளன.

பலன்கள்: உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். சரும வறட்சியைப் போக்கும். அசைவ உணவுடன் சேர்க்கும்போது செரிமானம் எளிதாகும். மாதவிலக்கு பிரச்னைகள்கூட விலகும். ரத்தத்தை சுத்திகரிக்கும் வல்லமை பெற்றது.  மழைக்காலத்தில் டீயில் போட்டு குடிக்கலாம்.

டிப்ஸ்: புதினா சாதம், புதினா துவையல், புலாவ் போன்றவை செய்து சாப்பிடலாம்.

கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

புண்களை ஆற்றும் பருப்பு கீரை

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில்கூட இந்தக் கீரை மிகவும் பிரபலம்.

சத்துக்கள்: இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, தாது உப்புக்கள் உள்ளன

 பலன்கள்: வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். இதன் சாறை புண்களின் மீது தடவினால், புண் குணமாகும். வியர்க்குரு, சருமப் பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு அருமருந்தாக இருக்கிறது. உடல் உஷ்ணம் குறையும். எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.

டிப்ஸ்: கீரையுடன், பாசிப்பருப்பை வேக வைத்து கடைந்து, தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது.

கீரை ரெசிப்பிகள்

வல்லாரைகோதுமை தோசை

தேவையானவை: வல்லாரைக் கீரை, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு.  

 செய்முறை: கீரையைப்  பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.   கோதுமை மாவை தோசை மாவுப்பதத்தில் கரைத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.  தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டு எடுக்கலாம்.

பலன்கள்: ஞாபகசக்தி அதிகரிக்கும்.  ஊட்டச்சத்து மிக்கது என்பதால், பெண்களுக்கும்  குழந்தைகளுக்கும் ஏற்றது.

வெந்தயக்கீரை  பருப்புக் குழம்பு

தேவையானவை: பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை  தலா 50 கிராம்,  சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, எண்ணெய்  தேவையான அளவு.

 செய்முறை: பருப்பையும் கீரையையும் வேகவைத்து, இரண்டையும் நன்றாகக் கடைய வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி, கடைசலில் கொட்ட வேண்டும். இதைக் கொதிக்கவைத்து இறக்கினால், குழம்பு தயார். சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

பலன்கள்: வெந்தயக்கீரை புரதம், தாது நிறைந்தது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

பசலைக்கீரைக் கடைசல்

தேவையானவை: பசலைக்கீரை, வெந்தயம், இஞ்சி, பூண்டு, உப்பு,  சின்ன வெங்காயம்  தேவையான அளவு.

செய்முறை: கீரையை நன்றாக வேகவைத்து கடைந்துகொள்ள வேண்டும். எண்ணெயில் இஞ்சித் துண்டு, உப்பு, சின்ன வெங்காயம், வெந்தயம் தாளித்து, கடைசலில் சேர்க்க வேண்டும்.  

பலன்கள்: பசலைக்கீரை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு.ஆஸ்துமா உள்ளவர்கள் கோடைக்காலங்களில் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு

தேவையானவை: அரைக்கீரை, சின்ன வெங்காயம்,  கடுகு, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், தனியா தூள், எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: கீரையில் சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில் தாளித்து, கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

பலன்கள்: கண் பார்வையைத் தெளிவாக்கும். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.

கொத்தமல்லிப் பொடி

தேவையானவை: கொத்தமல்லி  ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன், பெருங்காயம்  3 சிட்டிகை, காய்ந்த மிளகாய்  2, புளி  சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு  தேவையான அளவு.  

செய்முறை: கொத்தமல்லியை மண் போக நன்றாக அலசி, செடியின் வேர்ப் பகுதியை நீக்கி, பொடியாக நறுக்கி, துணியில் போட்டு 4, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுக்கவும். ஒரு இரும்பு கடாயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து, சிவக்க வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே புளியைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வறுத்துக்கொள்ளவும்.

பருப்புக் கலவை, புளி, கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததை ஒரு தட்டில் பரப்பி, 3  4 நாட்கள் நிழலில் உலர்த்தி, காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தவும். சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி மற்றும்  தயிர்சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

பலன்கள்: சிறுநீரகத்தை சுத்தம் செய்யும். உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும்.  

நச்சுக்கெட்ட கீரை கூட்டு

இந்தக் கீரையைப் பேச்சுவழக்கில், லஜ்ஜை கெட்ட கீரை’ என்றும் அழைப்பார்கள். ஆனால், உண்மையில் இதன் பெயர், நச்சகற்றி கீரை’ என்பதே.  வீடுகளின் முன்பக்கம் அழகுக்காக, குரோட்டன்ஸ் போல வளர்க்கப்படும் இந்தக் கீரை, சத்துக்களின் பெட்டகம்.

தேவையானவை: கீரை  2 கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு  அரை கப், உப்பு  தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைக்கவும். கீரையை நன்றாக அலசிக் கழுவி, பொடியாக நறுக்கவும். கீரை, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு வேகவைத்து தேவையான உப்பு சேர்க்கவும்.  எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, சீரகம், பெருங்காயம் சேர்த்து, மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கீரைக் கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து பரிமாறவும்.

பலன்கள்: உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியம் காக்கும்.  

அகத்திக் கீரை சுண்டல்

தேவையானவை: அகத்திக் கீரை  2 கைப்பிடி, பாசிப்பருப்பு  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  1, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாயைக் கிள்ளிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, தாளித்த பொருட்களைச் சேர்த்து வதக்கி, ஊறவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேகவைக்கவும். மிகவும் குழைய வேகவிடக் கூடாது. பருப்பு வெந்ததும், கீரையை உப்பு சேர்த்து வதக்கி, மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.  

குறிப்பு: அகத்திக் கீரை ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கவில்லையெனில், கீரையைப் பக்குவப்படுத்தி உபயோகிக்கலாம்.  

பக்குவப்படுத்தும் முறை: அகத்திக் கீரை அதிகமாகக் கிடைக்கும் சமயத்தில் வாங்கி, ஆய்ந்து, அலசி, ஒரு துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலான இடத்தில் 2  3 நாட்கள் உலரவைத்தால், ஈரம் இல்லாமல் காய்ந்துவிடும். அந்தக் கீரையை, காற்றுப் புகாத டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தலாம்.  தேவையான சமயங்களில் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீரில் போட்டு, 2 மணி நேரம் ஊறவைத்தால், அப்போது பறித்த கீரை போல மாறிவிடும்.

பலன்கள்: எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.  குடல் புண்ணைப் போக்கும். மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து.  

தவசி கீரை பொரியல்

தேவையானவை: துளிரான தவசி கீரை  தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி  தலா 1, பச்சை மிளகாய்  2, உப்பு  தேவையான அளவு.  எண்ணெய்  ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: கீரையைக் கழுவி நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய துளிர் கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து இரண்டு முறை கிளறி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.

பலன்கள்: உடலைப் பலப்படுத்தும். சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தரக்கூடியது.

முருங்கைக்கீரை ராகி கட்லெட்

தேவையானவை: இளசான முருங்கைக்கீரை  ஒரு கைப்பிடி, கேழ்வரகு மாவு  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய்   தலா 1, மிளகுத்தூள், சுக்குத்தூள்  தலா கால் டீஸ்பூன், பிரெட் தூள்  ஒரு கைப்பிடி, நல்லெண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிரெட் தூள் தவிர்த்து, மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.  பிறகு, கட்லெட்களாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபக்கமும் நன்றாக சிவக்கவைத்து எடுக்கவும்.

பலன்கள்:  ஆண்மை பலம் பெருகும்.  ரத்த உற்பத்திக்கு நல்லது.

Leave a Reply