shadow

ரஜினிக்கு மிரட்டல் விடுத்த ஹாஜி மஸ்தான் மகனுக்கு தனுஷ் பதில்

‘கபாலி’ படத்தை அடுத்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் மும்பை டான் ஹாஜி மஸ்தான் கதை என்ற வதந்தி கிளம்பியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ரஞ்சித் ஏற்கனவே பேட்டி கொடுத்திருந்த நிலையில் சமீபத்தில் ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் ரஜினிகாந்த் தனது தந்தையின் கதையில் நடிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஹாஜி மஸ்தான் மகனின் மிரட்டல் கடிதத்திற்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட்ள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எங்கள் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க, பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் (Production No :12) படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக திரு. ஹாஜி மஸ்தான் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.

அந்த செய்தியின் அடிப்படையை கொண்டு திரு. ஹாஜி மஸ்தான் அவர்களின் வளர்ப்பு மகன் திரு.சுந்தர் சேகர் மிஸ்ரா அவர்கள் இது சம்பந்தமாக திரு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் தொடர்பாக இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது. குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.

இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் திரு பா. இரஞ்சித் அவர்கள், தன்னை தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை” என்ற செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்’

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply