பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக அ.தி.மு.க. கட்சியின் எம்.பி. தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தனியாக தேர்தலில் நின்று 37 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய 3வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது.
இந்நிலையில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் என டெல்லி வட்டாரங்கள் கூறியிருந்தன. ஆனால், அகில இந்திய அளவில் பெரிய கட்சி தாங்கள்தான் என்றும் அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸின் நாடாளுமன்ற குழு தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தங்கள் கட்சி சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
எனவே காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும் அதிமுகவுக்கு பாராளுமன்றத்தின் துணை சபாநாயகர் பதவியும் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன்படி அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.