சிறையில் இருக்கும் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு திருமணமா?
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீம் தனது திருமணத்திற்காக பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அவரது பாதுகாப்பு கருதி பரோல் வழங்க முடியாது என்று அனுமதி மறுத்து விட்டார். இதனால் அபுசலீம் திருமணம் கேள்விக்குறியாகியுள்ளது.
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த அபுசலீம் கடந்த 2005-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை தடா கோர்ட்டு அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் சிறை நிர்வாகத்திடம், தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அதனால் எனக்கு 40 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என மனு அளித்தார். இந்த மனுவை சிறை நிர்வாகம் கொங்கன் மண்டல கமிஷனருக்கு அனுப்பியது. இதைத்தொடர்ந்து அவரது மனுவை பரீசிலித்த மண்டல கமிஷனர், குற்றவாளி அபுசலீமின் பாதுகாப்பு கருதி அவருக்கு பரோல் வழங்க அனுமதி மறுத்து விட்டார்.
ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு அபுசலீம் தனது திருமணத்திற்காக விண்ணப்பித்த பரோல் மனுவை தடா கோர்ட்டு நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.