தமிழகம் முழுவதும் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையிலும், தி.நகரில் குடை பிடித்தபடி பொதுமக்கள் தீபாவளி பர்சேஸ் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக குடைபிடித்தபடி குவிந்துள்ளனர்.
நேற்று தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தி.நகரில் புதுத்துணி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தி.நகர் ரங்க நாதன் தெருவில் மக்கள் குடைபிடித்தபடி சென்ற காட்சியை காணமுடிந்தது. , உஸ்மான் சாலை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், தி.நகர் பகுதியே திணறியது. தொடர் மழையிலும் மக்கள் தீபாவளிப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழையால் தி.நகரில் சாலைகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நடைபாதையை ஆக்கிரமித்து கொண்டு கடைகள் போட்டுள்ளதால் பொதுமக்கள் நடக்கமுடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டனர். ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு மக்கள் புலம்பியபடியே குடை பிடித்து சென்று கொண்டிருந்தனர். தீபாவளி நேரம் என்பதால் போதுமான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்கியிருந்தாலும், நடைபாதை கடைகளை ஒழுங்குபடுத்த போலீஸார் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.