எனக்கு தொல்லை கொடுப்பவர்கள் யார் என்று தெரியும். தீபா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணிகள் ஒருபக்கம் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவதாக தனி அமைப்பு ஒன்றின் மூலம் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அரசியல் களம் புகுந்துள்ளார் தீபா
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஒருசில நாட்கள் தீபாவின் தி.நகர் வீட்டில் தொண்டர்கள் குவிந்தது உண்மைதான். ஆனால் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்த பின்னர் தீபாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்தது. ஓபிஎஸ் அவர்களுடன் இணைந்து செயல்படுவே என்று முதலில் கூறிய தீபா, பின்னர் திடீரென புதிய கட்சி ஆரம்பித்தது ஏன் என்று புரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிற கட்சியில் இருப்பது போல் இந்த கட்சியிலும் குடும்ப ஆதிக்கம் செயல்பட தொடங்கிவிட்டதாக தொண்டர்கள் புலம்புகின்றனர். கடந்த சில நாட்களாக, தீபாவின் கணவர் மாதவன் குறித்து வெளியாகும் தகவல்களால், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒருசில அறிக்கைகளில் தீபா கையெழுத்து இருப்பதில்லை என்றும் பேரவையின் நிர்வாகிகள் சிலர், மாதவனை முன்னிறுத்தியே அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டங்களில் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் தெளிவில்லாமல் உள்ளதாகவும், பேரவையில் உயர் பதவி அடைய வேண்டும் என்பதற்காக மாதவனை தவறான திசையில் சிலர் வழி நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டுகொள்ளாமல் தீபா தெளிவாக தொண்டர்களிடம் கூறியது இதுதான். நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு பேசிய தீபா, ‘எனக்கு எதிராக பிரச்னை செய்கின்றவர்கள் யார் என்று தெரியும். தொல்லை கொடுத்தால் ஓடி விடுவேன் என்று நினைக்கிறார்கள். ஜெயலலிதா பிறந்தநாளில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். மக்களுக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பயணிப்பேன். எனது தலைமையில் ஜெயலலிதா வழியில் நல்ல தொடக்கத்தைக் கொடுப்பேன்’ என்றார் உறுதியாக. ‘அவரது உறுதி என்னவாகும் என்பதற்கு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பதில் சொல்லும்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
Leave a Reply
You must be logged in to post a comment.