தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறனை கைது செய்ய செப்டம்பர் 14ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர்களிடையே இருந்து வந்த பரபரப்பு அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் இணைப்புகளை தவறாக பயன்படுத்திய வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஆனால் தயாநிதி மாறன் தரப்பில் ஏற்கனவே தனக்கு வழங்கப்பட்டிருக்கும் 6 வார இடைக்கால முன் ஜாமீனை, நிரந்தர ஜாமீனாக வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த சென்னை ஐகோர்ட், தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ததோடு, அவர் 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், முன்ஜாமீனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தயாநிதிமாறன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 14ஆம் தேதி வரை தயாநிதிமாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.