திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மற்றும் அந்தமான் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர்.கணேசன் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர். கணேசன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து அதிமுகவில் சேர்ந்தனர். அப்போது, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரிதி. இளம்வழுதி உடன் இருந்தார்.
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி-2 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே.சௌந்தரராசன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகர மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக் தனது கணவர் ஷேக் அப்துல்காதருடன் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் உடன் இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா. கோவிந்தராஜ பெருமாள், நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என். சின்னத்துரை உடன் இருந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார், கடலூர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் கடலூர் இரா. ராஜேந்திரன், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.கே. நரேந்திரன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.