அதிமுக கவுன்சிலருக்கு 12 வீடுகள் எப்படி வந்தது? விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சியில் உள்ள அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை என்பவருக்கு பலகோடி மதிப்பில் 12 பங்களாக்கள் இருப்பதாகவும், ஆனால் அவர் தன்னுடைய வேட்புமனுவில் ஒருவீடு கூட தனக்கு சொந்தமில்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி என்.கிருபாகரன், கடந்த 2006-2016-வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களாக இருந்தவர்களின் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
சொத்துப்பட்டியலில் அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு 12 வீடுகள் சொந்தமாக உள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி கிருபாகரன், ‘‘12 வீடுகளுக்கு சொந்தக்காரரான கவுன்சிலர் அண்ணாமலை தனக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்துள்ள அவர் மீது மாநில தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்று கேள்வி கேட்டார்.
பின்னர் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் ‘ ‘‘2006 முதல் அனைத்து கவுன்சிலர்களின் சொத்து விவரப்பட்டியலையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றுகோரிக்கை எழுந்துள்ளதால், இந்த வழக்கை பொதுநல வழக்காக கருதி இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றுகிறது.மேலும் கவுன்சிலர் அண்ணாமலை 12 பங்களாக்கள் வாங்க அவருக்கு பணம் எப்படி வந்தது? என்பதை காவல்துறையினர் விசாரணை செய்ய உத்தரவிடுகிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.