shadow

14

தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து நிகழும் கொலைவெறிச் சம்பவங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. நகைக்காகவும் பணத்துக்காகவும் சொத்துக்காகவும் நடக்கும் இந்த கொடூரங்கள் பெண்கள் மற்றும் முதியோர் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கி இருக்கிறது.

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனித்து வசிக்கும் பெண்கள் நகைக்காகவும் சொத்துக்காகவும் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்திருப்பது கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்த அவலத்தில் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி? கொலை செய்யப்பட்ட, கொள்ளைக்கு இலக்காகி தாக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசிப்பவர்கள். 400 வீடுகள், 500 வீடுகள் கொண்ட அபார்ட்மென்டுகள் எல்லாம் சென்னைக்கு வந்துவிட்டன. அருகருகே வீடுகள்… எதிரெதிரே கதவுகள். ஆனால், அடுத்த வீட்டில் வசிப்பது யாரென்று எவருக்கும் தெரியாது.

கிராமங்களில் வீடுகள் தள்ளித்தள்ளி இருந்தாலும், ஊரில் வசிக்கும் அனைவரையும் அனைவரும் அறிந்திருப்பார்கள். அறிமுகமில்லாத ஒருவர் தெருவில் நடமாடினால் ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சின்னதாக ஒரு குழந்தை போடும் சத்தம் கூட ஊரை ஒரு குடையின் கீழ் திரட்டி விடும். நகரங்களிலோ, மனிதர்கள் வீட்டில் இருந்தாலும் கதவுகள் சாத்தியே இருக்கின்றன… இல்லை என்றாலும் கதவுகள் சாத்தியே இருக்கின்றன.

காவல்துறை கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். தனியாக இருக்கும் முதியோர், பெண்கள் பற்றி ஒரு பதிவேடு தயாரிக்க வேண்டும். அந்த பதிவேட்டை சமூக நலத்துறைக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர் அமைப்புகளுக்கும் அப்பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும். அவர்களும் கண்காணிப்புப் பணியில் ஒருங்கிணைய வேண்டும். காவல்துறைக்கு இணையாக சமூக நலத்துறை முதியோர், பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

தனியாக இருக்கும் முதியோர், குறிப்பாக பெண்கள் மனதளவில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆபத்து நேரத்தில் வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகள் வேறு. அதே நேரம், தனக்குத்தானே புத்திசாலித்தனமாக போராட பெண்கள் தயாராக வேண்டும். ஆபத்து நேரத்தில் அதிர்ச்சி அடையக்கூடாது. அந்தச் சூழலில் இருக்கக்கூடிய ஆயுதங்களை வைத்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

அதே நேரம் புத்திசாலித்தனமும் வேண்டும். ஃபேஸ்புக்கில் எங்கெங்கோ இருப்பவர்களை எல்லாம் நண்பர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். அருகில் வசிப்பவர்களோடு அந்நியமாக இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். வீடுகளில் தனியாக இருக்கும் இளம்பெண்கள் தற்காப்புக் கலைகளான கராத்தே போன்றவற்றைக் கற்றுக்கொள்வது நல்லது.

திடீரென கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். ‘நகைகளை கொடுக்க மாட்டேன்’ என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையரிடம் புத்திசாலித்தனமாக பேசி, அவர்களை வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.

Leave a Reply