shadow

priyanka gandhiமகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், ராகுல்காந்திக்கு எதிர்ப்பும், பிரியங்கா காந்திக்கு ஆதரவும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை பிரியங்காவால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அவரை அரசியலுக்கு அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 15ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மகாராஷ்ட்ராவில் 42 தொகுதிகளிலும், ஹரியானாவில் 15 தொகுதிகளிலும் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இந்த இரு மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்விக்கு ராகுல் காந்தியின் தவறான பிரசாரமே காரணம் என அக்கட்சியினர் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில் ”மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானாவில் காங்கிரசுக்கு எதிரான மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். அதேளையில் நாங்கள் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிப்போம்” என  கூறியுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அம்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு ஏராளனமான தொண்டர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ”காங்கிரஸ் கட்சியை வழிநடத்த பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சி வலுபெறும்” என்று அவர்கள் கோஷமிட்டனர்

Leave a Reply