shadow

திமுகவினர்களின் மது ஆலைகளை மூடினாலே மதுவிலக்கு ஏற்பட்டுவிடும். ராமதாஸ்

ramdossதிமுகவின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் மது ஆலைகளை மூடினாலே பாதி மதுவிலக்கு ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ள  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ் நாட்டில் கடைசி சொட்டு மது உள்ளவரை போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

” தி.மு.க. தலைவர் கலைஞர்,‘நெஞ்சில் ஓர் வஞ்சமில்லா நீட்டோலை’ என்ற தலைப்பில் நேற்று ஒரு  கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தி.மு.க.வின் மதுவிலக்கு வாக்குறுதி குறித்து நான் எழுப்பிய வினாக்களுக்கு விடை சொல்வதை விட, ஏதோ கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டதைப் போல கொந்தளித்திருக்கிறார்.  உண்மை சுடுவதை அவரது கடிதத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு இன்று தலையாய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறேன். கடந்த காலங்களில் நான் எதற்காக போராடினேனோ, அதற்காக இப்போது மற்ற கட்சிகளும், மாணவர்களும், பொதுமக்களும்  போராடத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எந்த நேரமும் பின்வாங்குவதற்கு வசதியாக  ஓர் அறிவிப்பை கலைஞர் வெளியிட்ட போது, ‘‘1996 ஆம் ஆண்டில் தொடங்கி 2010 ஆம் ஆண்டு வரை 5 முறை இதே வாக்குறுதியை அளித்தீர்களே? முதல் வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து  10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே… அப்போதெல்லாம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்? இந்த 5 வாக்குறுதிகளில் நான்கை ஆட்சியில் இருந்த போது தானே அளித்தீர்கள்… நீங்கள் நினைத்திருந்தால் ஒற்றைக் கையெழுத்தில் அவற்றை நிறைவேற்றியிருக்கலாமே?, ஆனால், அப்படி செய்யாமல் தி.மு.க.வினருக்கும், உங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்பளித்தவர்களுக்கும் மது ஆலை அமைக்க வாய்ப்பளித்தீர்களே? இதற்குப் பிறகும் மது விலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக நீங்கள் அளிக்கும் வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவை காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்’’ என்று கூறினேன். இதில் என்ன தவறு? என்பதை கலைஞர் அவரது மனசாட்சியிடம் கேட்கட்டும்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக 5முறை அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாதது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை கலைஞரிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது பா.ம.க. வைத்தது உண்டா? என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ‘‘தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி அல்ல… அது தொகுதிப் பங்கீடு தான்’’ என்று தொடர்ந்து கூறிவரும் கலைஞர் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது இந்த விஷயத்தில் அவர் குழம்பிப் போயிருப்பதை காட்டுகிறது.

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் போதெல்லாம் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் ஆட்சி நடைபெறும். அதேபோன்ற ஏற்பாட்டை தமிழகத்தில்  தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ செய்திருந்தால் நிச்சயமாக அதில் மதுவிலக்கை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்திருக்கும். ஆனால், அத்தகையதொரு ஏற்பாட்டுக்கு தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இதுவரை முன்வந்தது உண்டா? என்பதை முத்தமிழ் அறிஞர் தான் விளக்க வேண்டும்.

சரி… கலைஞரின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் 1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில்,

1. இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை,

2. அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகள்,

3. நடுவண் அரசின் அதிகாரங்களுக்கு வரம்பு,

4. விகிதாச்சார தேர்தல் முறையை ஏற்படுத்துதல்,

5. முக்கிய முடிவுகளை பொது வாக்கெடுப்புக்கு விடுதல்,

6. நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்களை மக்களே திருப்பி அழைக்கும் முறை,

7. தொழில்களை தேசிய மயமாக்குதல்,  

8. முறையான நிலச் சீர்திருத்தம்,

9. ஊழலுக்கு எதிர்ப்பு,

10. தாய்மொழி வழியில் கல்வி,

11. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக்கல்வி,

12. தமிழை ஆட்சி மொழியாக்குதல்,

13.தேவிகுளம், பீர்மேடு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன.

நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா ஆகிய கட்சிகளுடன்  தி.மு.க. மாறி மாறி கூட்டணி அமைத்தபோது இந்த கோரிக்கைகளையெல்லாம் கலைஞர் நிபந்தனையாக  வைத்தாரா? குறைந்த பட்சம்… 1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான அரசு, 1996 ஆம் ஆண்டில் தேவேகவுடா அரசு, 1997 ஆம் ஆண்டில் ஐ.கே. குஜ்ரால் அரசு, 1999 ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசு, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மன்மோகன்சிங் அரசு ஆகியவற்றில் சேரும் போது இந்த கோரிக்கைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் அமைச்சர் பதவியை ஏற்போம்… இல்லாவிட்டால் கொள்கை என்ற வேட்டியை வைத்துக் கொண்டு அமைச்சர் பதவி எனும் துண்டை வீசி எறிவோம் என்று கொண்ட கொள்கையில் உறுதியானவர் எனக் கூறிக்கொள்ளும் கலைஞர் எப்போதாவது கூறினாரா?

தி.மு.க. ஆட்சியில் தான் முதன்முதலில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதாக பலரும் பிரச்சாரம் செய்வதாக கலைஞர் கூறியிருக்கிறார். மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய மதுவிலக்கு ரத்து 1971 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது என்பது உண்மைதானே.

1948 ஆம் ஆண்டுக்கு முன் வரை தமிழகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில், ஏதோ ஒரு பகுதியில் மது இருந்து கொண்டு தான் இருந்தது. 1948 ஆம் ஆண்டில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு 1971 ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு தலைமுறைக்கு மது என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது. 1971 ஆம் ஆண்டில் 45 வயது வரை இருந்தவர்கள் மது போதையை அறியாதவர்களாக இருந்தனர். அப்போது கலைஞர் மதுவிலக்கை ரத்து செய்ததன் காரணமாகத் தானே நன்றாக இருந்த தலைமுறை மதுவுக்கு அடிமையானது. அதனால் தானே 1974 ஆம் ஆண்டில் மதுவிலக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் மதுவை ஒழிக்க முடியவில்லை. மது அணையின் கதவுகளை திறந்து விட்டு, ஊர் முழுவதையும் அது கெடுத்த பிறகு அணையை மூடிவிட்டேன் என்று சொல்வது அர்த்தமுள்ளதா? என கலைஞர் சிந்திக்க வேண்டும்.

1971 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியால் தான் மதுவிலக்கை ரத்து செய்ததாகவும், அது தமது நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருந்ததாகவும் கலைஞர் கூறியுள்ளார். மது மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று எப்போது ஓர் அரசு நினைக்கிறதோ, அப்போதே அது மக்கள் நல அரசு என்ற தகுதியை இழந்து விடுகிறது. 1937 ஆம் ஆண்டில் ராஜாஜி மதுவிலக்கு கொண்டு வந்த போது வருவாய் இழப்பை ஈடுகட்ட வணிக வரியை அறிமுகப்படுத்தினார். மது வேண்டாம்…. வரி செலுத்துகிறோம் என அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதன்பின் 1948 ஆம் ஆண்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஓமந்தூரார் முடிவு செய்த போது, அதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.18 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தடுத்தனர்.  ஆனால், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களோ, ‘‘மதுக்கடைகளை நடத்தினால் மக்களுக்கு ரூ.81 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்படும். அரசின் வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்’’ என்று  கூறி மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். கலைஞருக்கு ஏன் இந்த மன உறுதி இல்லாமல் போனது?

ஓமந்தூரார் ஆட்சியில் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.18 கோடி வருவாய் வந்தால் மக்களுக்கு ரூ.81 கோடி இழப்பு ஏற்படும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்று டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் ரூ.26,000 கோடி, பார்களில் மது விற்பனை மூலம் ரூ.10,000 கோடி என மொத்தம் ரூ.36,000 கோடி லாபம் கிடைக்கிறது. அதேநேரத்தில் உடல் நலக்குறைவு, உற்பத்தி இழப்பு என மக்களுக்கு ஏற்படும்  பாதிப்புகளின் மதிப்பு ரூ.1.17 லட்சம் கோடியாகும். மக்களிடம் மதுவைக் கொடுத்து பணத்தைப் பிடுங்குவதுடன், அதைவிட பல மடங்கு பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியதும், 4 வயது குழந்தை கூட மதுவுக்கு அடிமையாகும் சூழலை ஏற்படுத்தியதும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தானே?

மது விலக்கை ரத்து செய்தது மனதை உறுத்திக் கொண்டிருந்ததாக கலைஞர் கூறுகிறார். 1989 ஆம் ஆண்டில் மலிவு விலை மதுவை அறிமுகம் செய்த போது மனதை உறுத்தவில்லையா? ஒருவேளை  உறுத்திக் கொண்டிருந்தாலும், 2008 ஆம் ஆண்டில் கலைஞரை கோட்டையில் சந்தித்து தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி மன்றாடினேன்…. அதையேற்று மதுவிலக்கை நடைமுறைப் படுத்தியிருந்தால், இப்போது வெளியில் சொல்ல முடியாத, மன உறுத்தல் நீங்கியிருக்கும். ஆனால், அதை அப்போது செய்ய மறுத்தது ஏன்? என்று கலைஞர் தான் விளக்கமளிக்க வேண்டும்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறும் கலைஞர், தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயாரா? என்று கேட்டால்,  மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மது ஆலைகள் மூடப்பட்டுவிடும் என்று கூறுகிறார். இன்னொரு புறம் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்களுக்கு சொந்தமாக மது ஆலைகள் இல்லை… அவற்றை தங்களின் உறவினர்கள் தான் நடத்துகின்றனர் என்று கூறி முழுப்பூசணிக்காயை இலை சோற்றில் மறைக்க முயல்கிறார்கள். உண்மையில் திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்களால் நடத்தப்படும் 5 ஆலைகள் தான் டாஸ்மாக் நிறுவனத்திற்கு 50% மதுவை தயாரித்து தருகின்றனர்.

இன்றைய நிலையில் தமிழகத்திலுள்ள மற்ற மது ஆலைகளின் உற்பத்தியை அதிகரிப்பதோ, மற்ற மாநிலங்களில் இருந்து மதுவை வாங்குவதோ சாத்தியமில்லை என்பதால், இந்த 5 ஆலைகளையும்  மூடினாலே தமிழகத்தில் பாதி மதுவிலக்கு ஏற்பட்டு விடும். அதைசெய்ய கலைஞர் தயங்குவது ஏன்? மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தான் மது ஆலைகள் மூடப்படும் என்று கூறினால், மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் வரை மக்களும், பெண்களும், குழந்தைகளும் மது குடித்து சீரழிந்தால்  பரவாயில்லை என கலைஞரும், அவரது மது ஆலை பங்குதாரர்களும் கருதுகிறார்களா?

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடியவர் கலைஞர். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது என்பதால் தான், இதுவரை 5 முறை அளித்து நிறைவேற்றப்படாத  மது விலக்கு வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை அளித்திருக்கிறார். கலைஞர் ஓர் அரசியல்வாதி… எனவே இதை அவர் வாக்குகளை பெறுவதற்கான கருவியாக பயன்படுத்துகிறார். ஆனால், நான் அடிப்படையில் ஓர் மருத்துவர்…. அதனால் தான் மதுவிலக்கை ஒரு சமூக சாபக்கேடாக பார்க்கிறேன்.

கலைஞரின் கூற்றுப்படியே பார்த்தாலும் 1981 ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு  35 ஆண்டுகளாக தமிழகத்தை மது அரக்கன் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக இதுவரை ஒரே ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா? ஆனால், நான் அப்படியல்ல.

கடந்த 35 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே எனது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்களை மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்…

*    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே 1984 ஆம் ஆண்டில் மதுவுக்கு எதிராக  மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன்.
*     1989 ஆம் ஆண்டில் பா.ம.க. தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2 ஆவது தீர்மானமே      தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.
*      01.11.1989 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மதுவிலக்கு கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
*     12.10.1995 பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது, ஆபாச ஒழிப்பு மாநாடு நடத்தினேன்.
*     27.12.2001 அன்று, தமிழக அரசு அறிமுகப்படுத்திய மலிவு விலை மதுவை ஒழிக்கக் கோரி தலைமைச் செயலகத்துக்கு எதிரில் கருப்பு உடை அணிந்து எனது தலைமையில் ஒப்பாரி போராட்டம்.
*     29.08.2003 அன்று திண்டுக்கலில் மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் போராட்டம்.
*    2004 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பா.ம.க. மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற போது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம்பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
*    02.03.2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்
*    08.03.2007 அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்.
*    15.05.2007 அன்று தமிழகத்தில் மதுவின் தீமைகளை வலியுறுத்தியும், மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து விளக்கவும் பரப்புரை ஊர்தி பயணத்தை சென்னையில்         தொடங்கினேன்.
    18.05.2007 சென்னையில் மது ஒழிப்பு பிரச்சாரக் கூட்டம்.
*    17.10.2007 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
*    27.02.2008 அன்று சென்னையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.    
*     2008 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்
*    17.08.2008 அன்று திருச்சியில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.
*    18.08.2008 அன்று திருவண்ணாமலையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
*    23.11.2008 அன்று சென்னையில் மது ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.
*    27.06.2009 சென்னையில் மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு பேரணி
*    04.05.2011  மது விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் தோனியை கண்டித்து சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம்.
*     07.07.2012 அன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து மக்களுக்கு     விளக்கும் வகையில் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் துண்டறிக்கைகளை வழங்கினேன்.
*    17.07.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் கைது செய்யப்பட்டேன்.
*    19.07.2012 அன்று கோவையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி.
*    04.09.2012 அன்று மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் மதுரையில் கண்காட்சி.
*    17.07.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் கைது செய்யப்பட்டேன்.
*    26.02.2013 மதுவிலக்கை வலியுறுத்தி தருமபுரியில் பா.ம.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.
*    01.01.2014 ஆரணியில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில்  பா.ம.க. மகளிர் அணி சார்பில் மது விலக்குக்கு எதிரான மகளிர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.

இவை தவிர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன்.

மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை… மாறாக  சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை. அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் திமுகவுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடி காட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை. மற்றபடி மதுவிலக்கு கோரி இதயசுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில்  மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply