shadow

f0056130-92cd-4a1e-b058-15a342650b14_S_secvpf

ஒரு ‘தம்’ போட்டாத்தான் வேலை ஓடும். ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க… இதோ வந்து விடுகிறேன் என்று பெரிய பெரிய அதிகாரிகள் வரை அவ்வப்போது எழுந்து சென்று வருவதை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். சிகரெட்டை பற்ற வைத்து… இழுத்து…. வாய்க்குள் சூழும் புகையை சுருள் சுருளாய் வெளியே ஊதி விடும்போது அதென்னவோ இதயமே இலகுவாகி விட்டது போன்ற ஒரு மிரமை ஏற்படுகிறது.

மெத்த படித்தவர்களை கூட மொத்தமாய் கட்டி போட்டு இருக்கும் மோக பேய்கள்தான் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள். தண்ணியடிக்கவும், ‘தம்’ அடிக்கவும் தெரியலைன்னா இளவட்டத்தில் மரியாதையே இல்லை என்ற மனோநிலை உள்ளது. பள்ளி செல்லும் மாணவன் கூட பைக்குகள் ‘ஹான்சும்’ பாக்கெட்டில் சிகரெட்டும் கொண்டு செல்லும் அளவுக்கு காலம் மாறி இருக்கிறது.

இளமை பருவத்தில் சிகரெட் பிடிப்பதை ஸ்டைலாக கருதுகிறார்கள். அது காலம் முழுவதும் மறக்க முடியாத பழக்கமாக தொற்றிக் கொள்கிறது. கூடவே இலவசமாய் பல நோய்களையும் அழைத்து வருகிறது என்பது அப்போது புரிவதில்லை. ‘புகை உயிருக்கு பகை…..’ ‘இழுக்க இழுக்க இன்பம். இழுத்தபின் வருவது துன்பம்’- என்ற அறிவிப்பு வாசகங்கள் எல்லாம் சிகரெட் மீது வைத்திருக்கும் மோகத்தால் கண்களை மறைத்து விடுகின்றன.

புகை பிடிப்பதால், காசநோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய், புற்றுநோய், இருதய நோய், ஆண்மை குறைவிற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரித்து வருகிறது. இந்தியாவில் புகையிலை பழக்க வழக்கங்களால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழந்து வருகிறார்கள் என்ற உண்மைதான் இதயத்தை உறைய வைக்கிறது.

எனவேதான் புகையிலை பொருட்களின் மோகத்தில் சிக்கி கிடக்கும் மக்களை மீட்க அந்த பொருட்களின் உறைகள் மீது 85 சதவீத பரப்பளவில் எச்சரிக்கை படங்களை வெளியிட மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் பாராளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள திலீப்குமார் என்ற எம்.பி., புகையிலை பயன்படுத்துவதால் புற்று நோய் வருமா? என்பது உறுதிப் படுத்தப்படவில்லை. எனவே எச்சரிக்கை விளம்பரத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தார்.

நிலைக்குழுவின் சிபாரிசு அதிர்ச்சியையும், அரசியல் கட்சிகளிடையே சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. நிலைமையை உணர்ந்த பிரதமர் மோடி தலையிட்டு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசை ஒதுக்கி விட்டு எச்சரிக்கை விளம்பரத்தை உடனடியாக போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். திலீப்குமாரின் சர்ச்சைக்குரிய கருத்தும் இப்போது விவாத பொருளாகி விட்டது.

புகையிலை பொருட்கள் உபயோகிப்பதால் புற்று நோய் வருகிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை தேடுவதற்கு முன்பு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் இந்தியர்களை தொற்றிக் கொண்ட விசயத்தை அறிந்து கொள்ள வேண்டும். இந்த சரக்குகள் எதுவும் நமது சரக்குகள் இல்லை. எல்லாமே சீமை சரக்குகள் தான்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வடஅமெரிக்காவில் தற்போதைய மெக்சிகோ நகர பகுதிகளில் இருந்த காடுகளில் மட்டுமே புகை யிலை செடிகள் வளர்ந்து இருந்தன. அதை காட்டுவாசி மக்கள் பறித்து காய வைத்து குழாய்களில் அடைத்து அந்த புகைத்து வந்தார்கள். மென்று சாப்பிடும் பழக்கமும் இருந் திருக்கிறது. அமெரிக்காவை கண்டு பிடித்த ஐரோப்பியர்களும் புகையிலையை சுவைக்க தொடங்கினார்கள்.

ஒரு விதமான ‘கிக்’ அதில் இருப் பதை உணர்ந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹெர்னாண் டஸ்வான்கெலோ என்பவர் 1550-ம் ஆண்டு வாக்கில் புகையிலை விதைகளை எடுத்து சென்று ஸ்பெயினில் பயிரிட தொடங்கினார். பணம் கொழிக்கும் வியாபார பயிராக மாறியதால் போர்ச் சுக்சீசியர்கள், டச்சுக் காரர்கள், வெள்ளைக்காரர்கள் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் புகையிலை பயிரை வளர்த்தனர்.

பெரிய கணக்காரர்கள் பணப்பயிராக வளர்த்து லாபம் ஈட்டினார்கள். 1700-ம் ஆண்டுக்கு பிறகு தான் இந்தியர்களிடையே புகையிலையை பயன்படுத்தி ‘சுருட்டு’ புகைப்பது, புகையிலை மெல்வது போன்ற பழக்கங்கள் ஏற்பட்டது. உலகிலேயே சீனாவில் தான் அதிக அளவு (32 லட்சம் டன்) புகையிலை உற்பத்தியாகிறது. 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

நமது நாட்டில் 8 லட்சம் டன்னுக்கு மேல் உற்பத்தியாகிறது. 3120 புகையிலை நிறுவனங்கள் செயல்படுகிறது. சாதாரண மக்கள் ஊதி தள்ளும் புகை பல பெரும் பணக்காரர்களை மேலும் மேலும் உயரே கொண்டு செல்கிறது. பணம் காய்ச்சி பயிராக விளங்கும் புகையிலை உற்பத்தியை பெருக்க பல திட்டங்களை புகுத்தி வருகிறார்கள்.

புகையிலையில் இருந்து சிகரெட், பீடி, சுருட்டு, பொடி, பேஸ்ட், குட்கா, மிட்டாய், புகையிலை பானம் உள்பட 14 வகையான பொருட்கள் தயாராகிறது. உலக அளவில் 74 லட்சம் டன் புகையிலை ஆண்டு தோறும் உற்பத்தியாகிறது. 110 கோடி மக்கள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை யாகி இருக்கிறார்கள். அவர்களில் 3-ல் 1 பங்கு பேர் இளைஞர்கள்.

புகையிலையை கண்டு பிடித்த அமெரிக்காவில் அதன் தீமையை உணர்ந்து புகை பிடிப்பவர்களின் சதவீதம் 42-ல் இருந்து 20.8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 3.4 சதவீதம் அதிகரித்து வருகிறது. உலக அளவில் புகையிலை பொருட்களால் இறப்பவர்கள் எண்ணிக்கை 54 லட்சம். இதில் 5-ல் ஒரு பங்கு இந்தியர்கள்.

* ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போதும் வாழ்நாளில் 1 மணி நேரத்தை இழக்கிறோம்.

* புகையிலையில் இருக்கும் நிகோடின் உடலின் உள் உறுப்புகளை சிதைக்கிறது.

* புகைப்பதால் மாரடைப்பு, புற்று நோய் அதிகம் தாக்கும்.

* கர்ப்பிணி மனைவி அருகில் இருந்து கணவர் ஊதி தள்ளினால் குழந்தை வளர்ச்சி தடைபடும். கருச் சிதைவு அபாயமும் உண்டு.

* இளம்பெண்களும் புகை பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள்.

இதனால் மலட்டு தன்மை ஏற்படும். இவ்வளவு ஆபத்து என்பது தெரிந்தும் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகி தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் பரிதாப நிலையில் இருக்கும். இவர்களை காப்பாற்ற வேண்டும். வரும் தலைமுறை புகையிலை பொருட்களை திரும்பி பார்க்காத வகையில் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம். புகை பிடிக்கும் பழக்கத் திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல் நலத்துக்கு எதிரானது என்பதை நன்கு அறிந்து கொண்டிருந்தாலும், ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று நினைப்பார்கள். புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

Leave a Reply