shadow

டோக்லாம் விவகாரம்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு

இந்தியா சீனா நாடுகளுக்கு இடையே டோக்லாம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தர முன்வந்துள்ளது. இதனால் ஜப்பான் மீது சீனா கடும் ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 17ஆம் தேதி, இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் கெஞ்சி ஹிராமட்சூ தமது அறிக்கையில், டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் முயற்சித்த சீனாவின் நடவடிக்கை அத்துமீறல் என்று கூறினார். இந்த விவகாரத்தில் சீனா மீதே தவறு உள்ளதாக ஜப்பான் குற்றம்சாட்டியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீனா, ‘ஜப்பானிய தூதர் இந்தியாவிற்கு ஆதரவளிக்க விரும்புகிறார். ஆனால் உண்மை என்ன என்பதை சரியாகத் தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கக் கூடாது. டோக்லாம் பகுதியில் இருதரப்புக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை.

இருநாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடு குறித்து, இருதரப்பும் தெளிவான அறிவு பெற்றிருப்பதாக கூறினார். அதேசமயம் எல்லையில் ஊடுருவல் செயல்களில் ஈடுபடுவது இந்தியா தான்; சீனா இல்லை என்று கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜப்பான் இந்தியாவுக்கு முழு அளவில் ஆதரவளித்தால் சீனா பின்வாங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply