“தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம்ஆட எடுத்திட்ட பாதம் அன்றோநம்மை ஆட்கொண்டதே”
என்று தெய்வ அருள் பெற்ற திருநாவுக்கரசர் பக்திப் பெருக்குடன் பாடித் தொழுத புண்ணியத் திருத்தலம் தில்லையம்பலம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்.
மொழிகள் அனைத்திற்கும் மூலம் ஒலியே. அதுபோல் இப்பிரபஞ்சத்தின் மூலமாய் இருப்பது ஓம் எனும் பிரணவ மந்திரமே என்றுரைத்து அந்த வடிவாகவே இத்திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானை நினைத்தும், நேரில் கண்டும் வழிபடாத சைவர்கள் எவருமிலர் என்று கூறப்படும் பெருமை பெற்றது இத்திருத்தலம்.
சிவபெருமானின் பஞ்ச பூத திருத்தலங்களில் இத்தலம் ஆகாசத்திற்குரியதாகப் போற்றப்படுகிறது. இங்கு தனது பக்தர்களுக்கு ஜோதி வடிவாக இறைவன் காட்சி தந்ததாகவும் கூறப்படுவதுண்டு. எனவே, இத்திருக்கோயிலையே அக்னி மூலைக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
திருக்கோயிலின் நடுநாயகமாய், அம்பலத்தின் முன்னால், சிவகாம சுந்தரி சமேதராய் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தொழுத பின், இடப்பக்கம் திரும்பினால் கோவிந்தராஜரை வழிபடலாம். ஓரிடத்திலிருந்தே இருவரையும் வழிபடும் பாக்கியத்தை தந்துள்ள திருத்தலம் இது மட்டுமே.
சிவபெருமான் தனது பக்தர்களுக்கு தன்னை வெளிபடுத்திய விந்தையை இங்கு சிதம்பர ரகசியமாக கூறி காட்டுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.