சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கடந்த வியாழக்கிழமை இதை திறந்து வைத்தார். தற்போது பார்வையாளர்கள் கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்று சென்னை அழகை ரசிப்பதற்காக ‘லிப்ட்’ அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன வசதிகளுடன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கத்தின் தரைப் பகுதியில் கப்பல் துறை காட்சியகம் திறக்கப்பட்டிருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தில் இருந்து சென்னை அழகை கண்டு ரசிப்பதற்காக தினமும் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் வந்து செல்கிறார்கள்.
புதுப்பித்து திறக்கப்பட்ட முதல் நாளே பொது மக்கள் நீண்ட கியூவில் நின்று கலங்கரை விளக்கத்தில் உற்சாகமாக ஏறி மகிழ்ந்தனர். ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகளும் வந்தனர். இது போல் வெள்ளி, சனிக்கிழமைகளிலும் அதிக அளவில் இங்கு வந்தனர்.
மழை காரணமாக நேற்று கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. என்றாலும், கடந்த 4 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் மெரினா கலங்கரை விளக்கம் வந்துள்ளனர். 5 மணி நேரத்தில் 2000-த்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவதால் ‘லிப்ட்’ மூலம் கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு செல்வதிலும், அங்கு போதிய இடம் இல்லாததால் அதிக எண்ணிக்கையில் நின்று பார்வையிடுவதிலும் சிரமம் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.