கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ரசாயனப் பொருட்கள் அதிகம் கலந்திருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததன் காரணமாக அந்த உணவுப்பொருளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதைப்போல இன்னும் ஒருசில பொருட்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாகவும், அதை குடிக்கும் பொதுமக்கள் அதிகளவு உயிரிழக்கின்றனர் என்பதால், டாஸ்மாக் மதுபானங்களில் எவ்வளவு நச்சுத்தன்மை உள்ளது என கண்டறிய உத்தரவிட வேண்டும் என்று கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
தேவராஜன் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜராக வழக்கறிஞர், மதுபானங்களில் எவ்வளவு நச்சுத்தன்மை உள்ளது என்பது பற்றிய விவரம் தற்போது இல்லை என்றும் இதுகுறித்து ஆய்வு செய்ய சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மதுபானங்களில் உள்ள நச்சுத்தன்மையை கண்டறியவும், டாஸ்மாக் மதுபான வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தவும் ஒரு மாதம் கால அவகாசம் தருவதாகவும் இந்த ஒரு மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில் நச்சுத்தன்மை இருப்பதாக தெரிய வந்தால், டாஸ்மாக் மதுபானங்கள் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.