shadow

1396343316-9034

செம்பருத்திப்பூவின் மருத்துவ குணம் மகத்தானது. இதன் உண்மையான பெயர் செம்பரத்தை. ஆனால், செம்பருத்தி என்பதே நிலைத்துவிட்டது. இதில் ஒற்றை செம்பருத்தி, அடுக்கு செம்பருத்தி, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை செம்பருத்தி என்று இதில் பல வகைகள் உண்டு. ஆனால், ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப்பூ மட்டுமே மருத்துவக் குணத்துக்குரியது.

செம்பருத்திப்பூ சாப்பிட்டால், தங்க பஸ்பம் சாப்பிட்ட பலன்!

செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 6.5 கிராம் செம்பருத்திப்பூ சாப்பிட்டால், ஒரு குண்டுமணி அளவு தங்கம் சாப்பிட்ட பலன் கிடைக்கும். செம்பருத்திப்பூவின் மிக முக்கிய மற்றும் சிறப்பான அம்சம், இருதய நோய்க்கு இது அருமையான மருந்து. காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும். இருதய நோயாளிகளுக்கு வரக்கூடிய இருதயப் படபடப்பு, வலி, அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளையும் இந்த செம்பருத்திப்பூ சரி செய்ய வல்லது.

இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் செம்பருத்திப்பூவை மருந்தாக உட்கொள்ளும்போது, ஆறு பூக்களின் இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும். அந்தச் சாறில் 6 டீஸ்பூன் அளவு தினமும் காலை, மாலை என தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கை மேல் பலன் கிடைக்கும்.

செம்பருத்திப்பூ சர்பத்!

செம்பருத்திப்பூவை சர்பத்தாக செய்தும் சாப்பிடலாம். சர்பத் என்றதும், பெரிய செய்முறையோ என்று யோசிக்க வேண்டாம். செம்பருத்திப்பூ இதழ்களை மையாக அரைத்து, அதோடு சீனி (சர்க்கரை), தண்ணீர் சேர்த்தால், சர்பத் தயார். தினமும் சர்பத் செய்ய நேரம் இல்லாதவர்கள், மொத்தமாக 40, 45 பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து சுத்தமான பாத்திரத்தில் போட்டு தண்ணி ஊற்றி கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றியதும், அடுப்பில் இருந்து இறக்கி கையால் பிசைந்து கூழாக்கி வடிகட்டி, சாறை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 300 கிராம் சீனி (சர்க்கரை) சேர்த்துக் கலக்கி, பாகு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கவும். சூடு ஆறியதும், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும்போது 2 டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.

செம்பருத்திப்பூ சர்பத், இருதய நோய்க்கான மருந்து மட்டுமல்ல. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, அதாவது ஆளை உருக்கும் உள்சூடு தணியும். தாகம் தணிவதுடன் களைப்பு நீங்கும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், உடல் சூடு சமநிலைக்கு வரும்.

குழந்தைகளுக்கும் மருந்து!

குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம் பிரச்னைகளுக்கு, செம்பருத்தித்திப்பூ கஷாயம் நல்ல மருந்து. சில குழந்தைகளுக்கு கல்லீரலில் வீக்கம் வந்து அது காய்ச்சலாக வெளிப்படும். அந்தப் பிரச்னைக்கு, ஐந்து செம்பருத்திப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வந்தால், பலன் கிடைக்கும்.

பால்வினைநோயான வெட்டை நோயால் அவதிப்படுகிறவர்கள் மூன்று செம்பருத்திப்பூவின் இதழ்களை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் மென்று தின்று, கொஞ்சம் பசும்பால் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 40, 48 நாட்கள் சாப்பிட்டு வர, நிச்சய பலன் கிடைக்கும்.

அழகுப் பொருளாகும் பூ!

செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சீகைக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல், இளநரை பிரச்னைகள் சரியாகும். காய வைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாகக் காய வைத்துப் பொடியாக்கி, சோப்புக்குப் பதிலாக இதை தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, சரும நோய்களில் இருந்து விடபடலாம்!

எண்ணிடலங்காதவைதானே செம்பருத்திப்பூவின் பலன்கள்!

Leave a Reply