shadow

a9cad2ba-5eb1-4727-91d0-4d712bceccd9_S_secvpf

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா வலியுறுத்தினார். புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி அவர் நிருபர்களிடம் இதுகுறித்து நேற்று கூறியதாவது:-

உலகம் முழுவதும் புற்றுநோயால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை உயிரை இழக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 56 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ஆண்களுக்கு பெரும்பாலும் வயிறு, நுரையீரல், வாய், நாக்கு, பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றிலும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, வாய், வயிறு போன்றவற்றிலும் புற்றுநோய் வருகிறது. அதிக எடை, உடற்பயிற்சி இல்லாமை போன்றவை புற்றுநோய் வர காரணமாக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்க முடியும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் வர காரணமாக அமைகிறது.

எனவே அதை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மது குடிப்பவர்களுக்கும் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. புற்றுநோயை ஒழிப்பதில் மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. புகையிலை பொருட்களை கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தூரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்பதிலும் தமிழக அரசு அக்கறை செலுத்தி வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அதை குணப்படுத்த முடியும். 

Leave a Reply