10 தொகுதிகள் வென்றாலே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிதான். பாஜக தேசிய செயலர் பேச்சு
மத்தியில் வலுவாக ஆட்சியில் இருந்தபோதிலும், தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம் கிடைக்காமல் தனித்து விடப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது. இந்த கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் தற்போது பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றாலே தங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி என அக்கட்சியின் தேசிய செயலர் முரளிதர ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.
அரக்கோணம் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முரளிதர ராவ் புதன்கிழமை வாக்காளர்களிடையே பேசியதாவது: தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் ஊழல் அரசை நடத்தியுள்ளன. இங்கு, தற்போது மது, மணல், கிரானைட் கொள்ளையர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதை மாற்ற பாஜகவால் மட்டுமே முடியும். இத்தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள், மோடியின் புதிய திட்டங்களால் ஈர்க்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பது நிச்சயம்.
இன்று அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் அடிக்கடி வேட்பாளர்களை மாற்றி வருகின்றன. இவை, இரண்டுமே வணிக நிறுவனங்கள் போன்றவை. அவற்றுக்கு, யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு சீட்டை விற்று விடுகின்றன. இங்கு பண அரசியல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றாலே, மாநில அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.