shadow

muralidharravவரும் 2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

“பாஜக தேசிய நிர்வாகிகள், செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பெங்களூரில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கர்நாடகத்தை மையமாக வைத்து தமிழகம், ஆந்திரம், கேரளத்தில் பாஜகவைப் பலப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அடுத்த மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைகிறது.

கடந்த 10 மாதங்களில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகள், இளைஞர்கள், தொழில் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பிரசாரம் செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

பாஜக அரசியல் கொள்கைகளை வகுத்த தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் செயல்திட்டம் வகுக்கப்படும். நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பெங்களூரில் தேசிய செயற்குழு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் முடிவுகள் வரலாற்றில் நினைவு கூரப்படும்.

ஹரியானா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஜம்மு- காஷ்மீர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தனது சொந்த பலத்தில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜகவில் வலிமையான தலைவரை உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

2016 ஆம் ஆண்டு  நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்படும். தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை திருப்திகரமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 35 லட்சம் பேர், கேரளத்தில் 20 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. டெல்லி  சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததால், அதன் பாதிப்பு வேறு மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்பதில் உண்மையில்லை.

ராஜஸ்தான், பஞ்சாப், அஸ்ஸாம், மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல, பலவீனமாக உள்ள மாநிலங்களில் பாஜக வளரும்; அரசியல் ரீதியாக வெற்றி பெறும்”

இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.

Leave a Reply