பீகார் மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய கோயில் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு பீகார் வாழ் முஸ்லீம்கள் தங்களது நிலங்களை அன்பளிப்பாகவும், குறைந்த விலைக்கும் அளித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள கிழக்கு சம்பரான் என்ற மாவட்டத்தில் ரூ.500 கோடி மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய மகாவீர் கோயில் ஒன்று கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோவிலை கட்டுவதற்கு தேவைப்பட்ட சுமார் 50 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் பெருந்தன்மையுடன் அளித்துள்ளனர். 20,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் மிகவும் பிரமாண்டமாக அமையவுள்ள இந்த மகாவீர் கோயில் 2,500 அடி நீளமும், 1,296 அடி அகலம், 379 அடி உயரத்துடன் இருக்கும் என கூறப்படுகிறது.
ராமர், சீதை, லவ-குசாவுக்கு தனி சிலைகளுடன் கட்டப்படும் இந்த கோயில் வளாகத்தில், 18 சிறிய கோயில்களும், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கமும் அமைக்கப்பட உள்ளது.
நேபாளத்தின் எல்லையில் கட்டப்பட இருக்கும் இந்த கோயில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது. இந்த கோயிலை கட்டுவதற்காக தங்களது நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர் சில முஸ்லீம்கள். சிலர், தங்களது நிலங்களை நன்கொடையாகவும் அளித்துள்ளனர். இந்த கோயிலை மிக விரைவில் கட்டிமுடிக்க வேண்டும் என அப்பகுதி முஸ்லீம் மக்கள் அக்கறை காட்டி வருவதாக கோயில் கட்டுமானப் பணிகளை முன்நின்று நடத்திவருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.