உளுத்தம்பருப்பு பவுடர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சருமத்தில் ஏற்படும் அரிப்பு, கரும்புள்ளி ஆகியவற்றை நீக்கி  சருமத்திற்கு பொலிவை உண்டாக்கும் ஒரு அருமருந்து.

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப்பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உளுத்தம்பருப்பு – 100 கிராம், கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை – 10, கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் – 5. இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். `பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வாகப் பிரகாசிப்பீர்கள்.

* கண்ணுக்குக் கீழே கருவளையம் விழுந்து எப்போது பார்த்தாலும் `கவலைக்குரிய’ மனுஷியாகக் காணப்படுகிறீர்களா? உங்கள் கவலையைப் போக்குகிறது உளுத்தம்பருப்பு! 2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள். இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து அலசுங்கள். வெள்ளரிக்காய், கருவளையத்தைப்போக்கி `ப்ளீச்’ செய்யும். உளுத்தம் பருப்பு கண்களுக்குக் கீழே இருக்கிற தோலின் முரட்டுத்தனத்தைப் போக்கி, தோலை மென்மையாக்கும்.

* முகத்தில் சுருக்க வரிகள் தோன்றி கவலைப்படுத்துகிறதா? மனம் சுருங்க வேண்டாம். கசகசா – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், முழு உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன் இவற்றை ரவைபோல் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன், கஸ்தூரி மஞ்சள் – ஒரு சிட்டிகை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டால் முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். சுருக்கம் முற்றிலுமாக நீங்கி, முகம் இளமையாகிவிடும்.

* புதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்குகள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

* சிலரது உதடுகள் கறுப்பு லிப்ஸ்டிக் போட்டது போல இருக்கும். அவர்களுக்கு ரோஜா இதழ்களை அளிக்கிறது உளுத்தம்பருப்பு வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில், உதடுகள் ரோஜா நியமாவதுடன், மென்மையாகவும் ஆகும்.

* கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்…….. வெள்ளை ரவை – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன். இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில் எலுமிச்சைசாறை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இரவு படுப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை வெடிப்பின் மேல் தேய்த்து, உலர்ந்ததும் கழுவுங்கள். பிறகு பாதத்தைத் துடைத்து விட்டு, சிறிது கிளிசரின் தடவுங்கள். நாலைந்து நாட்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், பித்த வெடிப்பு, சேற்றுப் புண் போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். காலும் மெத்தென்று இருக்கும்.

* குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் ஏற்படுகிற `ஸ்ட்ரெச் மார்க்’குகள் பல பெண்களின் தீராத கவலை. அதற்கும் தீர்வு வைத்திருக்கிறது உளுத்தம்பருப்பு! வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன். இந்த இரண்டையும், உளுந்து ஊற வைத்த தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை வயிற்றில் `பற்று’ மாதிரி போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வரிகள் மறைவதுடன் அரிப்பும் ஓடியே போகும்.

குறிப்பு: உளுத்தம்பருப்புப் பொடிகளை தயாரித்து, பல நாட்கள் வைத்து உபயோகிக்கக் கூடாது. உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது கொஞ்சமாக அரைக்க வேண்டும் என்பதால், இவற்றை அரைப்பதற்கென்றே தனியாக ஒரு சிறு அம்மியை வைத்துக்கொள்வது நல்லது.

Leave a Reply