shadow

p04

மழை வந்தாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவத் தொடங்கி, படுக்கவைத்துவிடுகிறது. ”வேகமாகப் பரவுகிறது டெங்கு”, ”டெங்குவால் அட்மிட் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு” என்கிற செய்திகள் கதிகலங்கவைக்கின்றன. மழைக்காலத்தின் அடையாளமாகிவரும் இந்த டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியுமா?  டெங்கு பற்றிய முழுவிவரத்தையும், வருமுன் காப்பதற்கான தகவல்களையும் தருகிறார் தொற்றுநோய்த் துறை மருத்துவர் சுரேஷ்குமார்.

‘ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மற்ற காய்ச்சலைப் போல அல்லாமல், மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் போது ரத்தத்தில் உள்ள, பிளேட் லெட்ஸ் (Platelets) என்ற ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறையும். மருத்துவர் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் நோயிலிருந்து விரைவில் குணமாகி

விடலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிகம் உடல் எடை கொண்டவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழவகைகள், மோர், கஞ்சி, நீர் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’

மழைக்காலத்தில் அதி கரிக்கும் கொசுக்கள் டெங்கு உட்பட இன்னும் பல காய்ச்சல்களைத் தந்துவிட்டே செல்கின்றன. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால், இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

மலேரியா காய்ச்சல்

பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட கொசு, மனிதர்களைக் கடிப்பதன் மூலம்  மலேரியா மனிதர்களுக்குப் பரவுகிறது.

அதிகக் காய்ச்சலும், உடல் சில்லிட்டு ஏற்படும் நடுக்கமும் இதன் முதல்நிலை அறிகுறிகள்.  தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். கொசு கடித்த ஒரு சில வாரங்க ளுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு ஒட்டுண்ணி சில மாதங்கள், சமயங்களில் வருடங்கள்கூட உடலில் அமைதியாக இருந்துவிட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்போது வெளிப்படும்.

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மலேரியாவைக் கண்டறியலாம். டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை, பரிந்துரைத்த காலத்துக்கு தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலம் மலேரியா காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

டைபாய்டு காய்ச்சல்

சாலமோனெல்லா டைபி (Salmonella typhi) என்ற பாக்டீரியாவால் டைபாய்டு பரவுகிறது. உணவு, நீர் மூலம் பரவும் காய்ச்சல் இது. மழைக்காலத்தில் சுகாதாரமற்ற நீர்  காரணமாக குழந்தைகளுக்கு இது அதிக அளவில் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகள். இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு மருந்துகள் உள்ளன.

பாதுகாப்பான குடிநீர், உணவு, டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்களிடம் நெருக்கம் தவிர்ப்பது நல்லது.  அவ்வப்போது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், தனிநபர் சுகாதாரத்தில் முக்கியத்துவம் கொடுத்தால், இந்தக் காய்ச்சலைத் தவிர்க்கலாம்.

எலிக்காய்ச்சல்

பாக்டீரியா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு இந்தக் காய்ச்சல் பரவுகிறது. எலியின் சிறுநீரை மிதிப்பவர்களின் சருமத்தின் வழியாக இந்தக் கிருமி உள்ளே நுழைகிறது. கிருமி உள்ளே நுழைந்து 2 முதல் 20 நாட்களில் பாதிப்பை வெளிப்படுத்தும். இந்தக் கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், குளிர், தசைவலி, கண் சிவத்தல், வாந்தி, மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதன் அறிகுறிகள் டெங்கு, மலேரியா போலவே இருக்கும். எலிக்காய்ச்சலை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். டாக்டர் பரிந்துரையின்படி, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தக் காய்ச்சலில் இருந்து தப்பலாம்.

மழைக்காலத்தில் எப்போதும் செருப்பு அணிந்து செல்ல வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பியதும் கால்களை  வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும்.

மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு டிப்ஸ்…

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், மழைக்கால நோய்கள் எளிதில் தாக்கும். நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிகிச்சைகளை எதிர்கொண்டு மீண்டு வருவதற்குள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பெற்றோர் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் குழந்தைகளை இந்த நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

   குழந்தைக்கு கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

   டெங்குவைப் பரப்பும் கொசு பகல் நேரத்தில்தான் கடிக்கும். எனவே, கொசு கடிக்காத வகையில் கை, கால் முழுவதும் மூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

   கொசு குழந்தைகளை கடிக்காதவாறு கொசுவிரட்டி கிரீம்களை (Repellent Cream) பயன்படுத்தலாம். ஆனால் பெரியவர்கள் பயன்படுத்தும் ஸ்ட்ராங் கிரீம்களை குழந்தைகளின் மெல்லிய சருமத்துக்கு பயன்படுத்தக் கூடாது.

   கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.

   என்னதான் மழை பெய்தாலும் தினமும் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும்.

   நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்கக் கொடுக்க வேண்டும்.

   அவ்வப்போது சமைத்த சூடான உணவையே கொடுக்கவேண்டும்.

   கைகளை சோப் அல்லது கிருமிநாசினி போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். குழந்தைகளையும் அவ்வாறே செய்யத் தூண்ட வேண்டும்.

  குழந்தைகளைத் தூக்குவதற்கு முன்பு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

   பெரியவர்களுக்குச் சளிகாய்ச்சல் இருந்தால் சரியாகும் வரை குழந்தையைத் தூக்குவதையோ, குழந்தை அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:

  தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை காய்ச்சல்

  திடீரென காய்ச்சல் அதிகமாகுதல்

  தலைவலி, கழுத்து வலி, உடம்பு வலி

  பித்தப்பை வீங்கி மூச்சுவிட கஷ்டப்படுதல்

  வயிறு உப்புசம், தோல் தடிப்பு

  தோலில் எரிச்சல், வாந்தி

  உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது

  மூக்கு மற்றும் பல், ஈறுகளில் ரத்தக் கசிவு

கொசுக்கள் மாயமாகும்!

  நிழலில் காயவைக்கப்பட்ட நொச்சி, நிலவேம்பு, வேப்பிலை இலைகளை மஞ்சளுடன் சேர்த்து சாம்பிராணி புகை போடுவதைப் போல, வீடு முழுக்க பரப்ப, கொசுவின் உற்பத்தி குறைவதுடன், நம் சுவாசத்துக்கும் வலு சேர்க்கும்.

  இயற்கை பூச்சிக் கொல்லியான பஞ்ச கவ்யத்தை (பால், தயிர், நெய், சாணம், கோமியம் சேர்ந்த கலவை) வீட்டைச் சுற்றி தெளித்தால் கொசுக்களின் எண்ணிக்கை குறையும்.

  வேப்பிலை, நிலவேம்பு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு கொதிக்கவைத்து, வீட்டைத் துடைத்தும், வீட்டில் தெளித்தும் பயன்படுத்தினால், கொசுவின் இனப்பெருக்கம் குறையும்.

  பேய் விரட்டிச் செடியின் வாசனைக்குக் கொசு நெருங்கவே நெருங்காது. அதனால், வீட்டிற்கு ஒரு நிலவேம்பு, நொச்சி, பேய்விரட்டி போன்ற செடிகளை வளர்க்கலாம்.

டெங்குவை தடுக்க செய்ய வேண்டியவை…

  டெங்கு கொசுவின் வாழ்விடமே, சுத்தமான நீர் தேங்கும் இடம்தான். எனவே, வீட்டுக்குப் பயன்படுத்தும் நல்ல நீர் நிரம்பிய பாத்திரங்களை நன்றாக மூடிவைக்கவும்.

  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கொசு புகாதவாறு பாதுகாப்பாக மூடிவைக்கவும். அதோடு, வாரம் ஒருமுறை சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

  வீட்டைச் சுற்றி நீர் தேங்கியுள்ள இடங்களில் 30 மி.லி பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெயை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க, கொசுவின் லார்வாக்கள் இறந்துவிடும்.

  கிணறுகளில், சிறுசிறு மீன்களை விடலாம். அது கொசுவின் லார்வாக்களைத் தின்றுவிடும்.

  தேவையற்ற பொருட்களை, வீட்டின் உள்ளே அல்லது வெளியே சேமித்துவைத்து, கொசுவை விருந்தாளியாக அழைப்பதை விட, ஒரேயடியாக அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள்.

  செப்டிக் டேங்க், வென்டிலேஷன் குழாய் போன்ற இடங்களில் நைலான் வலைகளைக் கட்டி, கொசு உள்ளே புகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

  வீட்டின் தோட்டம், ஜன்னல், பழைய பொருட்கள் இருக்கும் இடம், டயர் இருக்கும் இடம் போன்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

‘கொசு’று தகவல்!

ஒன்பது வகை மூலிகையால் செய்யப்பட்ட நிலவேம்பு குடிநீர் சூரணம், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் இலவசமாக வழங்கப்படுகிறது. இது டெங்குவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நொச்சி செடி இருக்கும் இடத்தில் கொசுக்கள் வர முடியாது என்பதால், கொசுக்களை அழிக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி, மக்களுக்கு நொச்சிச் செடியை வழங்கி வருகிறது.

டெங்கு காய்ச்சல் குறித்த சந்தேகங்களை கேட்க, தகவல்களை பெற கட்டணமில்லா தொலைபேசி 104 மூலமும்,04424334810, 04424350496 என்ற தொலைபேசி எண்கள் மூலமும், 94443 40496, 93614 82898 என்ற செல்போன் எண்கள் மூலமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு மிகச் சிறந்த மூலிகை. நிலவேம்பு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி, டெங்கு வைரஸ் தாக்கத்தினால், கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களைக் களைந்து, கல்லீரலைப் பலப்படுத்தும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் கொடுக்கக் கூடாது.

  நிலவேம்பு இலைகளை, மிளகு மற்றும் இஞ்சியுடன் சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். இதன் கசப்புத் தன்மையைக் குறைக்க, கொஞ்சம் தேன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவரலாம்.

  200 மி.லி தண்ணீரில் நிலவேம்புப் பொடி ஒரு டீஸ்பூன் கலந்து காய்ச்சவேண்டும். நீர் கொதித்து 50 மி.லியாக, வற்றியதும் வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும்.

  பப்பாளி இலையின் நரம்புகளை நீக்கி, சுத்தமான தண்ணீரில் இலையைக் கழுவி நீர்விடாமல் அரைத்து, சுத்தமான துணியில் சாறு பிழிய வேண்டும். 10  15 மி.லி சாறுடன் தேன் கலந்து குடித்துவர, டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.

Leave a Reply