மதுரையில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக வெகு சிறப்பாக நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.
பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடியிருந்தனர்.
கோடை காலம் என்பதாலும், மழை பொய்த்ததாலும் வைகை ஆற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. ஆனாலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இரவு நேரத்திலேயே குவிந்து அழகரை தரிசிக்கக் காத்திருந்தனர். இன்று அதிகாலை பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசித்து மகிழ்ந்தனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கு வைபவத்தை முன்னிட்டு வைகை ஆற்று பகுதிகளிலும், நகரின் முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.