தல சிறப்பு:
ஐயப்பனை போன்று யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் வலது முன்கையில் ருத்ராட்ச மாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்து அருட்காட்சி அளிப்பது சிறப்பு.
பொது தகவல்:
கோயிலின் நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மேற்குப் பக்கம் புற்றும், ராகுவின் திருமேனியும் உள்ளது. கோயில் உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் சுற்று தெய்வங்களாக காட்சி தருகின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சங்கடஹர
சதுர்த்தி நாட்களில் சிறப்பு அர்ச்சனையும், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகளும் நடைகிறது.
பிரார்த்தனை :
குழந்தைப்பேறு, தடைபட்ட திருமணம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், யோகா, தியானத்தில் சிறந்து விளங்கவும் இங்குள்ள யோகவிநாயகரை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், புதுவஸ்திரம், கொலுக்கட்டை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இத்தல விநாயகர், சபரிமலை ஐயப்பனைப்போல யோக நிலையில், யோக பட்டம் தரித்துக் கொண்டு இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு தன் நான்கு கரங்களில் பாசம், அக்ஷமாலை, யோகதண்டம், கரும்பு ஆகிய யோக அம்சங்களுடன் வேறெங்கும் காணமுடியாதபடி கோயில்கொண்டுள்ளார். யம, நியமம், ஆசனம், இரணாயாமம், பிர்தயாஹாரம், தாரணம், தியானம், அமைதி ஆகிய அஷ்டாங்க யோக லட்சனங்களோடு தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலித்துக் கொண்டிருப்பவர் தான் யோக விநாயகர். இந்த யோகவிநாயகரை தரிசிப்பதால் யோகம் எட்டும் உடனே கிட்டும். தினமும் கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றப்படுகிது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு:
கோவை மாநகரின் பிரசித்தி பெற்ற தலங்களில் யோகவிநாயகர் தலமும் ஒன்று. பொதுவாக யோகவிநாயகர் என்ற திருநாமத்தில் கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை எனலாம். கோவை குனியமுத்தூரில் யோகவிநாயகர் கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்றார். இப்பகுதியில் விநாயகர் கோயில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தவுடன் அரிதாக உள்ள விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய எண்ணினர். அதன்படி யோக விநாயகரை தேர்வு செய்து, அதற்கான விபரங்களை சேகரிக்கும் பொருட்டு ஆன்மீக அறிஞர்களையும், ஆதினங்களையும் சந்தித்தனர். அவர்களின் அறிவுரைப்படியும் சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் இச்சிலையை உருவாக்கினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: ஐயப்பனை போன்று யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் வலது முன்கையில் ருத்ராட்ச மாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்து அருட்காட்சி அளிப்பது சிறப்பு.
Leave a Reply
You must be logged in to post a comment.