ஸ்மார்ட் போன் செயலிகள் பயனுள்ளவைதான், சந்தேகமில்லை. ஆனால் அவற்றின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் பல செயலிகள் பயனாளிகள் பற்றிய தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருக்கின்றன. இது பற்றிய சமீபத்திய ஆய்வு கொஞ்சம் திடுக்கிட வைக்கிறது.
அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வு ஒரு சில ஆண்ட்ராய்டு செயலிகள் மூன்று நிமிடத்துக்கு ஒரு முறை பயனாளிகள் இருப்பிடம் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதாகத் தெரிவிக்கிறது.
ஆண்ட்ராய்டு போனுக்கான அனுமதி நிர்வகிப்பு செயலி துணையுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு சராசரியாக இரண்டு வாரத்தில் 4,182 முறை பயனாளிகள் பற்றிய தகவல் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. அமெரிக்க ஆய்வுதான் என்றாலும் பரவலாக எல்லாப் பயனாளிகளுக்கும் பொருந்தும் என்று கருதலாம். பெரும்பாலும் இலவச செயலிகளில் தான் இந்தச் சிக்கல் என்கின்றனர்.
ஸ்மார்ட் போனில் உள்ள பிளேஷ்லைட் செயலிகள் இவ்வாறு பயனாளிகளின் தகவலைச் சேகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவை பொதுவாக மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டாலும் சில நேரங்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டவும் இது போன்ற செயலிகள் மூலம் தகவல்களைக் களவாடலாம்.
ஆக அடுத்த முறை இலவச செயலிகளை டவுன்லோடு செய்யும் போது அது எதற்கெல்லாம் அனுமதி கேட்கிறது எனக் கவனியுங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.