shadow

app_2354969f

பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் அதிகளவில் நடந்தபடிதான் இருக்கின்றன. அவர்களுக்கு உதவவே புதிய மென்பொருளான மித்ராவை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகக் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த இணை பேராசிரியை சிவசத்யா மற்றும் மூன்றாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவர் ஜெயராஜ் ஒருங்கிணைந்து வடிவமைத்துள்ளனர்.

இலவசமாக இதை டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்று பலரிடம் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் பல அப்ளிகேஷன்களை நாம் டவுன்லோடு செய்வதுபோல் மித்ரா என்ற மென்பொருளையும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

உதவும் தொழில்நுட்பம்

தன் பேராசிரியையின் துணையோடு ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் மித்ராவை (Mobile Initiated Tracking and Rescue Application-MITRA) ஆறு மாதங்களில் உருவாக்கியிருக்கிறார் ஜெயராஜ். “ஆபத்து ஏற்பட்டால் ஒருவரால் உடனே செல்போனை இயக்கவோ, எஸ்எம்எஸ் அனுப்பவோ முடியாது. அப்போது நாம் செல்போன் ஒலி பட்டனை நீண்ட நேரம் அழுத்தினால் போதும்.

ஆபத்தில் சிக்கியுள்ள இடத்தின் காவல் நிலையத்தைக் கண்டறிவதுடன், அங்கு தெரிவிக்க வேண்டிய ஆபத்து கால எஸ்எம்எஸ் ஒன்று மூன்று நண்பர்களின் செல்போனுக்கு மித்ரா சாப்ட்வேர்

அனுப்பிவிடும். இதன் மூலம் அவர்களின் நண்பர்கள் உடனடியாகப் போலீஸுக்குத் தொடர்புகொண்டு ஆபத்தில் சிக்கியுள்ளவர் விவரத்தைத் தெரிவிக்க முடியும்” என மித்ரா ஆப்ஸின் செயல்பாட்டை விளக்குகிறார் சிவசத்யா.

புதிய முயற்சி

தற்போது புதுச்சேரியில் மட்டும் இந்த ஆப்ஸைப் பயன்படுத்த முடியும். புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்கள், தொலைபேசி எண்கள், தொண்டு நிறுவனங்கள், ஹெல்ப் லைன் போன்ற விவரங்களையும் மித்ரா மென்பொருள் மூலம் அறிய முடியும். இன்டர்நெட் இணைப்பு இல்லாத செல்போனிலும் மித்ராவை பயன்படுத்தலாம்.

இலவச மித்ரா மென்பொருள் தொடர்பான விவரங்களைப் பல்கலைக்கழக இணையதளம் www.pondiuni.edu.in என்ற இணையதளத்திலும் அறிந்து பதிவிறக்கம் செய்யலாம். “தற்போது போலீஸ் தரப்பில் பேசியுள்ளோம். அவர்களும் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தனர்” என்கிறார் சிவசத்யா. அடுத்த கட்டமான போலீஸ் இணையதளத்திலும் இந்த சாப்ட்வேரை டவுன்லோடு செய்யும் வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள் இவர்கள்.

புதுச்சேரியைத் தொடர்ந்து இதர மாவட்டங்களிலும் போலீஸ் நிலையங்கள், தொலைபேசி எண்கள் விவரங்களைச் சேகரித்து இணைத்து சாப்ட்வேரை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளதாம். “முதலில் ஒரு கல்லூரி ப்ராஜக்டாகத்தான் தொடங்கினோம். பின்னர்ப் போலீஸ் உட்படப் பல அரசுத்துறைகளுக்குச் சென்றபோது மித்ரா மென்பொருள் வரவேற்பு பெறத் தொடங்கியது.

பல துறைகளிலும் யோசனை தெரிவித்தார்கள். அதையும் இதில் நடைமுறைப்படுத்தினோம். முக்கியமாகப் புதுச்சேரி பல்கலைக்கழகத்தினுள் ராகிங் நடந்தால் ராகிங் கமிட்டிக்கு உடன் தகவல் தெரிவிக்கும் வகையிலும் உருவாக்கினோம். அதையும் எங்கள் இணையத்தில் வைத்துள்ளோம். பியூ மித்ரா என்று அதற்குப் பெயர். எங்கள் நண்பர்களும் பயனுள்ள பல திட்டங்களைத் தயாரித்துள்ளனர்” என்கிறார் ஜெயராஜ்.

Leave a Reply