பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) ஆகிய படிப்புகளில் சேர திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு 250 இடங்களும், இயன் முறை மருத்துவப் படிப்புக்கு 120 இடங்களும் உள்ளன.
இதேபோல் “பி.எஸ்சி. ரேடியாலஜி’ படிப்பில் சேர 60 இடங்களும், “பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி’ படிப்புக்கு 20 இடங்களும், “பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி’ படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. “பி.எஸ்சி.ஆப்தோ மெட்ரி’ படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன.
மேற்கண்ட படிப்புகள் தவிர சில மருத்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.
சுயநிதிக் கல்லூரிகள்: பி.எஸ்.சி. செவிலியர் படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 5 ஆயிரத்து 296 இடங்களும், “பி.பார்மஸி’ படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 1,172 இடங்களும், இயன்முறை மருத்துவ படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 630 இடங்களும் இருக்கின்றன. இந்த படிப்புகள் அனைத்தும் 4 ஆண்டு பட்டப் படிப்பாகும்.
இவற்றுக்கான விண்ணப்பப் படிவம் விலை ரூ.350. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்களது ஜாதிச்சான்று நகலை கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்பப் படிவம் இலவசம். அனைத்து படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது.
விண்ணப்பப் படிவம் ஜூலை 6 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் வரும் 17-ஆம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்படவுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஜூலை 18-ஆம் தேதிக்குள் – “செயலாளர், மருத்துவ தேர்வுக் குழு, அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகம், கீழ்ப்பாக்கம், சென்னை-10′ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
2 ஆண்டு பி.எஸ்.சி. செவிலியர் படிப்பு: 2 ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு (செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மட்டும்), 2 ஆண்டு மருந்தியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் (www.tnhealth.org) இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவுக்கு ஜூலை 9-ஆம் தேதி மாலைக்குள் வந்து சேர வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.