shadow

images (5)

கிரீன் டீ சாப்பிடுங்க, அதுல நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கு’. இப்படிப் பலரும் சொல்லக் கேட்டிருப்போம். நிறையப் பேருக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் உடலுக்கு நல்லது என்று தெரியும் ஆனால், அது என்னவென்று தெரியாது. டாக்டர்கள், உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம் ஆன்டிஆக்ஸிடன்ட். வயதாவதைத் தாமதப்படுத்துவது, புற்றுநோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது என உடல் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிவது ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான்.

நம் உடல்  பல்லாயிரம் கோடி செல்களால் ஆனது. நோய்த்தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்கள் செல்களைப் பாதிக்கின்றன. உணவை ஆற்றலாக, ஊட்டச்சத்தாக மாற்றும்போது உருவாவதுதான் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals). நாம் உட்கொள்ளும் உணவு, சுவாசிக்கும் காற்று காரணமாகவும், சருமத்தின் மீது சூரிய ஒளிபடுவதன் மூலமாகவும்கூட ஃப்ரீ ராடிக்கல்ஸ் உருவாகின்றன. ஃப்ரீ ராடிக்கல்ஸ் வெவ்வேறு வடிவத்தில், தன்மையில், அளவில் இருக்கும்.

உடலில் இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடிக்கு எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். ஏதாவது ஒரு காரணி இந்த செல் ஜோடியைப் பாதிக்கும்போது இதில், ஒரு எலெக்ட்ரான் குறையும். இதனால்அந்த செல்கள் தனித்துவிடப்படும். இந்த தனித்து விடப்படும் செல்கள் ‘ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. இவை அருகில் இருக்கும் மற்றொரு செல் ஜோடியிடம்  இருந்து ஒரு எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். இந்த எலெக்ட்ரான் கவர்தல் தொடர் சங்கிலியாக நடைபெற்று உடலில் உள்ள பல செல்களையும் பாதிக்கும். உடலில் சில குறிப்பிட்ட வகை  நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கும்பட்சத்தில் அவை தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்த செல் ஜோடிக்குக் கொடுத்து, பிரச்னையைத்  தீர்த்துவைத்துவிடும். இந்தப் பாதிப்பை சரி செய்யும் நுண்ணூட்டச்சத்துக்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எனப்படுகின்றன.

அதிகம் அறியப்பட்ட வைட்டமின் ஏ, சி, இ, செலினியம் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் திறன் வாய்ந்தவை.

யாருக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் தேவைப்படும்?

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உடலில் இயற்கையாகத் தனித்து விடப்படும் செல்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் குறையும்போது, உடலில் தனித்துவிடப்படும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்தால், புற்றுநோய், இதயநோய் எனப் பல நோய்கள்  வர வாய்ப்புகள் இருக்கின்றன. மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற கெட்ட பழக்கங்களும் தனித்துவிடப்படும் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். இதைத் தவிர்க்க தினசரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
 
கதிர்வீச்சு பாதிப்பு உள்ள இடங்களில் வசிப்பவர்கள், உடலை வருத்தி மிக அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், நோயாளிகளுக்கு இந்த தனித்துவிடப்படும் செல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிக அளவில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள், அல்சைமர் முதலான மறதி நோய்கள், கண்புரை, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்க முடியும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் எவை?

தாவர வகைகளில் காய்கறிகள், மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, கருநீலக் காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கும். குறிப்பாக, இவற்றில் இருக்கும் பீட்டாகரோட்டின், கல்லீரலில் வைட்டமின் ஏ வாக மாறி, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படும். விதைகளிலும், எண்ணெய் வித்துக்களிலும் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களிலும் வைட்டமின் இ அதிக அளவு இருக்கும். புதினா – கொத்தமல்லி ஜூஸ், நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம். விலங்குகளில் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றில் இருக்கக்கூடிய ரெட்டினால், ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படும் திறன் கொண்டது.

ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகள் சாப்பிடலாமா?

உணவின் மூலம் ஆன்டிஆக்ஸிடன்ட்களைப் பெறுவதே சிறந்தது. ஏதேனும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உட்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளைச் சாப்பிடலாம். தினமும் இரண்டு கப் காய்கறி, ஒரு கப் பழம், ஏதாவது கீரை ஒரு கப் சாப்பிட்டு வந்தாலே, உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் மட்டுமின்றி அனைத்து  நுண்ணூட்டச் சத்துக்களும்  கிடைத்துவிடும்.

Leave a Reply