shadow

swamyஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தன்னை மூன்றாம் தரப்பு வாதியாக சேர்க்கக் கோரிய‌ திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரது மனுக்களை கர்நாடக ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில், சுப்பிரமணியன் சுவாமியின் ‘3-வது தரப்பாக ஆஜராகி வாதாடும்’ கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அரசு வழக்கறிஞருடன் இணைந்து அவர் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான கருத்துக்களை அறிக்கை வடிவில் அளிக்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, இந்த இரு உத்தரவுகளையும் இன்று பிறப்பித்தார்.

முன்னதாக, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தம்மை 3-ம் தரப்பாக‌ சேர்க்கக் கோரிய‌ திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது விவாதம் நடைபெற்று வந்தது.

அன்பழகன் தரப்பு இறுதி வாதத்தை முன்வைத்த திமுக வழக்கறிஞர் சரவணன் “அன்பழகனின் கோரிக்கையை ஏற்று சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2013-ல் அரசு வழக்கறிஞரின் செயல்பாடுகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களை இவ்வழக்கில் 3-ம் தரப்பாக சேர்த்துக்கொண்டது.

இதனால் விசாரணையின் போது அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், எழுத்துப்பூர் வமாக இறுதி வாதத்தையும் தாக்கல் செய்தோம்.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 301(2)-ன் கீழ் நீதியை நிலைநாட்ட குற்றவியல் வழக்குகளில் தனிநபர் தலையிட உரிமை உள்ளது. எனவே எங்களை இவ்வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவ அனுமதிக்க வேண்டும்” என்றார். இதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும், ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமாரும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அப்போது வாதிட்ட பி.குமார், குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 301(2)-ன் கீழ் தனிநபருக்கு வழங்கும் உரிமை அன்பழகனுக்கு பொருந்தாது. ஏனென்றால் அவர் திமுகவின் பொதுச்செயலாளர். மேலும் அவர் ஒருபுறம் அரசு வழக்கறிஞருக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனக் கோருகிறார். மறுபுறம் அவரை நீக்க வேண்டும் என்கிறார். இதிலிருந்து அவர்களது கோரிக்கையில் உள்நோக்கம் வெளிப்படுகிறது என்றார் அவர்.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அன்பழகன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Leave a Reply