shadow

தினகரனுக்கு ஆதரவாக இருப்பவர்கள் வெட்கப்படவேண்டும்: ஆனந்த்ராஜ்

நடிகரும் அதிமுக அனுதாபியுமான ஆனந்த்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து வெளியேறினார். கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவ்வப்போது தனது அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை எந்த அமைச்சரும் பார்க்கவில்லை. டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதா என்னும் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா பழச்சாறு குடிப்பது போன்ற அந்த வீடியோவில் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடவில்லை.

எனவே வீடியோ விவகாரம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் உண்மையை வெளி கொண்டுவர வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சசிகலாவிடம் ஆணையம் விளக்கம் கேட்டதற்கு பாராட்டுக்கள்.

தமிழக அரசு செயல்படவில்லை என்பதை விட, அவர்களை செயல்படவிட வேண்டும் என்பதே எனது கருத்து. மேலும் ஆர்.கே.நகரில் தினகரன் மாயாஜாலம் செய்து வெற்றி பெற்று விட்டார். தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக தொண்டர்கள் வெட்கப்படவேண்டும். இவ்வாறு ஆனந்த்ராஜ் கூறினார்.

Leave a Reply