shadow

தமிழக அரசின் அவசர சட்டத்தால் நிரந்தர தீர்வு கிடைக்குமா?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு தயார் செய்துள்ள அவசர சட்டம் நிரந்தரமான தீர்வு கிடையாது என்றும் இந்த சட்டத்தால் எந்த பயனும் இல்லை என்றும் முன்னாள் நீதிபதிகள் உள்பட பல சட்ட வல்லுனர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டரில் #ammendpca என்ற ஹேஷ்டேக்கில் பல சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில்
கடந்த 2011, ஜூலை 11ஆம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில், காளைகளை, மத்திய சுற்றுசூழல், வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த பட்டியலில் இருந்து காளைகளை நீக்க எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு தற்போது அவசர சட்டத்தை ஏற்படுத்தி, அதை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது.

இதற்கு எப்படியும் அனுமதி கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. ஆனால் இது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே. விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளைகளை மத்திய அரசு விலக்குவது மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு என அந்த ஹேஷ்டேக்கில் கூறப்பட்டுள்ளது.

இப்பிரச்சனையின் உண்மையான வெற்றி சட்ட திருத்தத்தில் மட்டுமே உள்ளது. விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 160ல் திருத்தம் செய்வதால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஜல்லிக்கட்டு உரிமை தொடரும். இந்த சட்டத்தின் உட்பிரிவு 11படி, ஜல்லிக்கட்டு விலங்குகளுடனான சண்டை என கூறுகிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டும். தவிர, பிரிவு 11/3ன் படி, கலாசாரம், பாரம்பரிய நிகழ்வுகளில் காளைகளை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கிறது. அதை நீக்க வேண்டும். அடுத்த கூட்டத்தொடரிலேயே இதை செய்ய முடியும். இதற்காக தமிழக எம்.பி.,க்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் முடியும். மாணவர்களும், மக்களும் எழுச்சி மூலம் இதை சாதிக்க வேண்டும்.

Leave a Reply